31 Jan 2011

எங்கிருந்தோ நான்...

எங்கிருந்தோ நான்...


மாலை நேரம்...!
மணி ஐந்து...!!

கரை மீது கொண்ட
காதலால்
கடற்க்கரையை
கட்டியணைத்துக் கொண்டிருந்தது...!
கடல் அலை...

அந்த கடற்க்கரையோரம்
அவளுக்காய் காத்திருந்தேன்...!
நான்...

எப்போதும்
எனக்கு முன்னே வந்து
எனக்காக காத்திருப்பவளை
இன்று ஏனோ -நான் வந்து
இருபது நிமிடமாகியும் காணவில்லை...!

யோசித்துக்கொண்டிருந்த
அடுத்த ஐந்தாவது நிமிடத்தில்
அவள் வந்தாள்...!

முழுநிலவாய் மின்னும் -அவள்
முகத்தில் இன்று
பிறை நிலவாய் ஏதோ
குறை தெரிந்தது...!

என்
பக்கத்தில் அமர்ந்து
பல கதைகள் சொல்பவள்
இன்று ஏனோ
இடைவெளி விட்டு நின்றாள்...!

எல்லாமே
எனக்கு புதிதாயிருந்தது...!

அவள் முகத்தையே
பார்த்து நின்றேன்...!

அவள் கண்களுக்குள்
கண்ணீர் துளி...!
என் இதயம் இப்போது
மவுனமாய் அழுதது...!!

கண்ணீர் துளிகளுக்கு
காரணம் கேட்டேன்...!
மவுனமே பதிலாய் கிடைத்தது...!!

இன்னொருமுறை கேட்டேன்...!
இப்போதும் மவுனமே பதிலானது...!!

அரைமணி நேரம்
அதே மவுனம்...!
அதற்க்குள்
ஆயிரம் முறை செத்துப்பிழைத்தது....!!
என் இதயம்...

அரைமணி நேரம் கழிந்து
அவள் வாய் திறந்தாள்...!

என்னை நீ
மறந்துவிடு என்றாள்...!
மறுத்தேன் நான்...!!

நீதான் என் உயிர் என்றவள் -இப்போது
நீங்கிப்போக சொல்கிறாள்...!
மரணம் உன் மடியில் என்றவள் -இப்போது
மறந்து போக சொல்கிறாள்...!!

இதயத்திற்க்குள்
இடி தாக்கியது போல்
இப்போது எனக்கு உணர்வு...!!

என்
உதடுகளோ பேசத்தெரியாமல்
ஊமையாகி நின்றது...!
கண்கள்
கண்ணீர் துளிகளாய் பேசியது..!!

விளக்கம் சொல்ல
விரும்பவில்லை அவள்...!
விலகி நடக்க தொடங்கினாள்...!!

தூரத்தில் அவள்
புள்ளியாய் மறையும் வரை
அவளை பார்த்து நின்றேன் நான்...!

என் கால்களோ
எனக்கே தெரியாமல்
ஆழ்கடலை நோக்கி
பயணமானது...!

அன்றிலிருந்து இரண்டாவது நாள்...

அவள் வீடு...

அன்றைய நாளிதளை
அவள் புரட்டிக்கொண்டிருந்தாள். ..!

அதன் ஆறாவது பக்கம்...
கடற்கரையோரம்
அடையாளம் தெரியாத
ஆண் பிணம்...!
அருகில் என் புகைப்படம்...!!
அலறினாள் அவள்...!!!

பார்த்தவள்
பதறியடித்துக்கொண்டு ஓடினாள்...!

ஊரே கூடியிருக்க
உயிரில்லாமல் கிடந்தேன் நான்...!
மூச்சு நின்று
மூன்று நாட்க்களாயிருந்தது...!!

அரைமணி நேரத்தில்
அங்கு வந்தாள் அவள்...!

உயிரில்லாத என்னை கண்டு -அவள்
உடலே நடுங்கியது...!
கட்டிப்பிடித்து
கதறினாள் அவள்...!!

ஆசையிருந்தும்
ஆறுதல் சொல்ல முடியாமல் நான்...!

மரித்துக்கிடந்த என்னிடம்
மறந்துவிட சொன்னதற்க்காய்
மன்னிப்பு கேட்டாள்..!

என்னை கட்டி அணைத்தப்படி
விட்டுப்போகாதே என அழுதாள்...!

எனக்கே தெரியாத
ஏதோ ஓரிடத்திலிருந்து
நடப்பதையெல்லாம்
வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த நான்
எனக்குள் நினைத்துக்கொண்டேன்....!
ஓ... கடவுளே...!
இந்த ஜென்மம் முழுவதும்
இவளோடு வாழ
நான்
உயிரோடிருந்திருக்க கூடாதா....

----அனீஷ் ஜெ...

26 Jan 2011

ஈரம்...

ஈரம்...

 

வெண்மேகம் கொஞ்சம் கொஞ்சமாய்
கருமேகமாய்
உருமாறிக்கொண்டிருந்தது...!

அமைதியாய் வீசி நின்ற
அழகிய தென்றல் காற்று,
அப்போதுதான்
ஆக்ரோஷமானது...!

வானத்தின் ஜன்னலை
கிழித்து வந்த மின்னல் ஒளி - என்
கண்ணெதிரில்
காற்றில் பட்டு தெறித்தது...!

சத்தங்களை
சலிப்பில்லாமல்
பிரசவித்துக்கொண்டிருந்தது
பின்னால் வந்த இடி முழக்கம்...!

மழைத்துளிகள் மண்ணிலே
புள்ளி வைக்காமல்
புதியதாய் ஒரு
நீர்க்கோலம் போட தொடங்கியது...!

என் வீட்டு திண்ணையில் நான்...!

மழையையும்,
மழையின் சலசலப்பையும்
என்றுமே நான் ரசித்ததில்லை...!

அப்போது ஏனோ
அடைமழையை ரசிக்க சொன்னது...!
அடி மனது...

மழையையும்,
மழைத்துளி சத்தத்தையும்
ரசிக்க பிடிக்குமென
என்றோ ஒரு நாள் - அவள்
என் காதில் சொன்னதாய் ஞாபகம்...!

மறந்து கிடந்த
மனதிற்குள்
மறுபடியும் மரணவலி...!

துடிக்கும் இதயம்
சட்டென்று
வெடித்தது போல் ஒரு உணர்வு...!

மழையில் நின்று கொண்டு
அவள் என்னை
அழைப்பது போல் இருந்தது...!

மழையில் நனைந்தால்
மறுநாளே அவளுக்கு
காய்ச்சல் வந்துவிடுமே...!
மழையில் குதிப்பவளை
கைகளால் கட்டியணைத்து
கரையேற்ற வேண்டும் போலிருந்தது...!

முட்டாள் நான்...!
இன்னும்
நிழல்களையும், பிம்பங்களையும்
நிஜமென்று
நினைத்துக்கொண்டிருக்கிறேன்...!

சிந்தி விழுந்த மழைத்துளியும்
என்னைப் பார்த்து
சில்லென்று
சிரிப்பது போலிருந்தது...!

மழைத்துளிகளுக்கிடையில்
மறுபடியும் ஒருமுறை - அவள்
முகத்தை தேடினேன்...!

கடைசியாய் சந்தித்த அன்று
மறந்துவிட சொல்லி
அவள் எங்கோ
மறைந்து போனது -என்
மனதிற்க்குள் இப்போது கனத்தது...!

தலைசாய்த்துக்கொண்டு
அப்படியே கண்மூடினேன் நான்...!

நான் கண்விழித்து பார்க்கும் போது
மழை மொத்தமாய்
நின்றுபோயிருந்தது...!

மண்ணை தொட்ட
மழைத்துளியின் ஈரம் - என்
கண் முன்னே மெதுவாய்
காணாமல் போய்க்கொண்டிருந்தது...!

ஆனால்,
என் கண்ணீர் நனைத்த
என் கன்னங்களும்,
அவள் நினைவுகள் நனைத்த
என் மனதும்
இன்னும் ஈரமாகவே இருந்தது...!

----அனீஷ் ஜெ...
 

20 Jan 2011

எனக்காய் படைக்கப்பட்டவள் அவள்...

எனக்காய் படைக்கப்பட்டவள் அவள்...


காதல்...!
என்னையும் அவளையும்
கட்டி இழுத்த
ஒற்றை காந்தம்...!!

இதயப் பரிமாறல்கள்
எங்களை இடமாற்றியது...!
இப்போது
நான் அவளிடத்திலும்,
அவள் என்னிடத்திலும்...

என் கறுப்பு கனவுகளுக்கு
காதலால் வண்ணம் பூசியவள் அவள்...!
ஒரு சொட்டு காதலால்
என்னை தொட்டுப்போனவள் அவள்...!!

சின்ன ஊடல்கள் இருந்தாலும் - என்
சிறு இதயம் துடிப்பதோ அவளுக்காகதான்...!

சுவாசிப்பதால் இல்லை...!
அவளை நேசிப்பதால்தான்
உயிரோடிருக்கிறேன் நான்...

இரு மனங்களும் பக்கத்தில்...!
ஆனால்
நாங்களோ தூரத்தில்...

பவுர்ணமி வானத்திலும்
பார்க்க முடியவில்லை நிலவை...!
இதயத்திற்க்குள் தங்கியிருந்தும்
இன்னும் பார்க்கவில்லை அவளை...!!

ஆசைகள்
அடிநெஞ்சில் குடியிருக்க
அவள் நினைவுகள்தான்
ஆகாரம் எனக்கு...!

இமைகளை மூடிக்கொண்டால்
இருள் தெரியவில்லை...!
அவள்தான் தெரிகிறாள்...

அவளிடம் பேச என்னிடம்
ஆயிரம் கதைகள் இருக்க - அவள்
காதுகள் ஏனோ
கண்ணுக்கெட்டாத தூரத்தில்...

தொலைவில் இருந்தாலும்
நினைவுகளில் தான்
விருப்பங்கள்
நெருக்கம் கொள்கிறது...!

ஆகாயத்திற்க்கு கீழ் பூமியில்
அவள் கடைசி பெண்னில்லை...!
ஆனாலும்
அவள் படைக்கபட்டதோ
எனக்காகத்தான்...

நித்திரையை மறந்து
நித்தம் அவளை நினைத்து
காத்திருந்தேன் நான்...!
அவளை சந்திக்க...

கடைசியில்,
காத்திருந்து
சந்தித்தேன் அவளை நான்...

மணிக்கணக்கில் பேசுபவள்
மவுனங்களால் பேசினாள் அன்று...!
வெழுத்திருந்த கன்னங்களோ
வெட்கங்களால் சிவந்தன...!!

பேச நினைத்ததெல்லாம்
உதடுகளுக்குள்ளேயே
உயிர் விட்டது...

புன்னகைத்தவள்
மவுனத்தால் புதிர் போட்டள்...

கடைசியில் மவுனங்கள் கரைய
மலரிதழ்கள் விரிய
வாய் திறந்தாள் அவள்...

நிறையவே பேசிக்கொண்டோம் அன்று...

இதயங்கள் இன்னும்
இறுக்கமாகி நெருக்கமானது...!

சோகங்கள்...!
கோபங்கள்...!!
எதிர்ப்புகள்...!!!
எல்லாவற்றையும் மீறி
எனக்கு சொந்தமானாள் அவள்...

அவள்
விரல் பிடித்தேன் நான்...

கனவுகண்ட வாழ்க்கை...!
கவலையற்ற வாழ்க்கை...!!
கைகூடியது எனக்கு...

கோடி சந்தோஷம்
கூடி வந்த உணர்வு...

வாழ்க்கை பாதையில்
அவளோடு சேர்ந்த பயணம்...!
அளவில்லாமல் மகிழ்கிறேன் நான்...

காலங்கள் கரைந்தோட
வயதாகிப் போனது எனக்கு...

பறிபோன பற்கள்...!
குழி விழுந்த கண்கள்...!!
நரைத்துப்போன தலை...!
உளறும் உதடுகள்...!!

தளர்ந்து போன கால்களோ
தரையில் பயணிக்க
தயக்கம் காட்டுகிறது...!

ஆனாலும்,
தள்ளாடும் வயதிலும் நான்
சந்தோஷமாய்
பயணித்துக்கொண்டிருக்கிறேன்...
எனக்கு துணையாய் வரும்
அவள் விரல்களை பிடித்துக்கொண்டு.....

----அனீஷ்...

17 Jan 2011

பாழாய்ப்போன மனசு!

பாழாய்ப்போன மனசு!


உன்
விழிகள் ஏற்றி வைத்த
பார்வை விளக்குகள்தான் - என்
இதயம் முழுவதும்
இடைவிடாமல் பற்றி எரிகிறது...!

உன்
முக தரிசனங்களோ,
கோடை மழையையும்
பகல் நிலவையும்
பார்த்த பரவசம் தருகிறது...!

உன்
மவுனப் புன்னைகை
உதிர்த்த சத்தமோ,
என் உயிரின் நுனியில்
எங்கோ ஓங்கி ஒலிக்கிறது...!

உன்
கன்னப் புத்தகத்தில்
கவிதை எழுத,
என் உதட்டுப் பேனா
எப்போதும் காத்துக்கிடக்கிறது...!

உன்
கைவிரல் அசைவுகளில்
காற்றும் வீணையாகி,
சத்தமில்லாமல் - ஒரு
சங்கீதத்தை தர தவமிருக்கிறது...!

உன்
துப்பட்டா மறைத்த பாகங்கள்
ஈட்டி முனையாய்,
தேடி என் இதயத்தை தாக்க,
தேகமெங்கும் காதல் காயம் படர்கிறது...!

உன்
பாதங்கள் இரண்டும்
பாதையில் நடந்தாலும் - என்
பாழாய்ப்போன மனசுதான் -உன்னை
பத்திரமாய் சுமப்பதாய் நினைக்கிறது...!

----அனீஷ்...

12 Jan 2011

உயிரில் கலந்தவன் நீ...

உயிரில் கலந்தவன் நீ...


அன்பே...
எண்ணிலடங்கா
என் அணுக்கள்
ஒவ்வொன்றிலும்
ஒன்றாய் கலந்தவன் நீ...!

சிரிப்பை தந்தவனும் நீதான்...!
என்னை ரசித்து நின்றவனும் நீதான்...!!
என் உயிரில் கலந்தவனும் நீதான்...!
என்னை அன்பில் கரைத்தவனும் நீதான்...!

நான் என்னை பார்க்கும்
கண்ணாடியாய் நீ இருக்க,
என் இதயம் முழுவதும்
உன் பிம்பங்களே...

நீ எனக்காய் எழுதும்
எல்லா கவிதைகளிலும்,
வரிகளை விட
உன் காதலைத் தான்
அதிகம் ரசிக்கிறேன் நான்...!

நீ என்னை தொட்டுப் பறிக்க
எனக்காய் எல்லாம் விட்டுக்கொடுக்க
கட்டுப்பட்டு போகிறேன் நான்...!
உன் கட்டுப்பாடற்ற அன்புக்குள்...

முத்தத் தீண்டல் - உன்
எல்லைத் தாண்டல் என
கொண்டாட்டப் பொழுதுகளில்
திண்டாடிப் போகிறேன் நான்...!

உன் அணைப்புகளில்
எனக்கே தெரியாமல்
பிணைக்கைதியாய்
உன்னிடம்
சரணடைந்துவிடுகிறேன் நான்...!

சமயலறையில்
சத்தமில்லாமல் பின்னாலிருந்து
கட்டியணைத்து - என்
கன்னத்தோடு -நீ
கதை சொல்லும் போது
அடுப்பை விடவும்
அதிகமாய் சூடாகிறேன் நான்...!!

உன்னோடு நான் இருக்கும்
ஒவ்வொரு நொடியும்,
ஆயிர ஜென்ம சந்தோஷங்களை
அள்ளித் தருகிறது எனக்கு...

உன் அன்புக்கு முன்னால்
ஆகாயமும் சிறியதாக,
உன் பாசத்தில் நான்
பனியாகி உருகிப்போகிறேன்...!

நானோ உன்னை - என்
இதயத்தில் மட்டும் சுமக்க,
நீயோ என்னை
இதயத்திலும் - உன்
இரண்டு கைகளிலுமாய்
சுமந்து செல்கிறாய்...

என்னை
அளவுக்கதிகமாய் நேசிக்கும்
உன்னைவிட,
உன்னை அதிகமாய் நான்
நேசித்துக்கொண்டிருப்பேன்...!
என் இதயத்துடிப்பு
முடியும் வரை...

----அனீஷ் ஜெ...

7 Jan 2011

ஹைக்கூ - முத்தம்

ஹைக்கூ - முத்தம்

 

நம் இதழ்கள் தானே
இரகசியம் பேசுகிறது..!
உன் கண்கள் ஏன் அதற்காய்
கதவடைக்கிறது...!!
முத்தம்...


***********************************************************************************
 

உன்னை முத்தமிட
உன் அருகில் வந்தேன்..!
என்னை முந்திக்கொண்டு
உன் கன்னத்தில் முத்தமிட்டது...!!
வெட்கம்...


----அனீஷ் ஜெ...

4 Jan 2011

குழப்பம்...

குழப்பம்...

 

வானம் மறைத்த கருமேகம்...!

சொட்டும் மழைத்துளி
கொஞ்சம் கொஞ்சமாய்
கொட்டும் அருவி மழையாகிறது...!

தனியே நான்
வெளியே செல்ல வேண்டும்...!

எடுத்து செல்லவும்
எனக்கு மனமில்லை...!

விட்டு செல்லவும் - எனக்கு
விருப்பமில்லை...!

கிழிந்து போன - என்
பழைய குடையை...

----அனீஷ்...

1 Jan 2011

சந்தோஷ புத்தாண்டு

சந்தோஷ புத்தாண்டு


கோடி சந்தோஷங்களை
கொடுத்தவள் நீ...!
ஆயிரம் தவிப்புகளை
தந்தவள் நீ...!!

பட்டாசாய் படபடத்த - என்
இதயத்தை
மத்தாப்பாய்
மலர வைத்தவள் நீ..!

என் சுவாசத்தில் கலந்து
என் உயிருக்குள் புகுந்து
என் குருதிக்குள் பாய்பவள் நீ...!

என் இதயமோ
ஏதேதோ கவலைகளை சுமந்த
கடந்த புத்தாண்டு...!

உன்னால்
ஏராளமான சந்தோஷங்களை
என் இதயம் சுமக்கும்
இந்த புத்தாண்டு...!

இந்த புத்தாண்டில்
பட்டாசு வெளிச்சத்தில்,
வானத்தை போலவே
என் மனசும்
மின்னிக்கொண்டிருக்கிறது...!
உன்னால்...

----அனீஷ் ஜெ...