28 Feb 2011

பள்ளிக்கூட பாடம்

பள்ளிக்கூட பாடம்


அந்த பக்கம்
முதல் பெஞ்சில் நீ...!
இந்த பக்கம்
கடைசி பெஞ்சில் நான்...!

நமக்குள்
இடைவெளி இருந்தாலும்,
இடையிடையே
நீ வீசும் - அந்த
ஓரப்பார்வையில்
நமக்குள் இருக்கும் - அந்த
தூரம் கூட உடையும்...!

நீ சமைத்த உணவு என்று
நீ சொல்வதாலென்னவோ,
உணவு இடைவேளைகளில்
உன் வீட்டு உணவில்தான்
நான் பசியாறியிருக்கிறேன்...!

என் வீட்டுப்பாட புத்தகத்தில்
எதையும் நான்
எழுதியதில்லை...!
என் வீட்டுப்பாட புத்தகத்திலுள்ள - உன்
அழகிய கையெழுத்தின்
அடையாளங்களை - எந்த
ஆசிரியரும் கண்டுபிடித்ததுமில்லை...!

பள்ளிக்கூடத்திலிருந்து
உன் வீடுவரைக்கும்
பழுதடைந்த சாலை...!
கால்களை பதம்பார்க்கும்
கரடுமுரடான கற்கள்...!
நடப்பதென்னவோ நீதான்...
வலிப்பதோ என் கால்கள்...

விடுமுறை நாட்களில்
விட்டுவிட்டு சாவதுபோல் உணர்வு...!

காதலா நட்பா
கண்டுபிடிக்கமுடியாத
கேள்வியாய் அந்த உணர்வு...

அன்றொருநாள்,
அதிக மதிப்பெண் வாங்கவில்லையென
ஆங்கில ஆசிரியர் - உன்னை
அடித்துவிடவே,
பள்ளிக்கூடம் முடிந்து
போகும் வழியில்,
என் தோளில் சாய்ந்து
அழுதாய் நீ...!

நினைவாய் அந்த நிகழ்வு...!

உன்னை நான் தொலைத்து
வருடங்கள் பலவாகிவிட்டது...!

உன் கண்ணீர் துளிபட்ட
என் சட்டையும்
பழையதாகி கிழிந்துபோய்
பலநாளாகிவிட்டது...!
ஆனால்,
அந்த கண்ணீர் துளியை மட்டும்
அடிக்கடி இப்போதும்
நான் உணர்வதுண்டு...!!
என் கன்னங்களில்...

----அனீஷ் ஜெ...

23 Feb 2011

சாலையோர மழைத்துளிகள்...

சாலையோர மழைத்துளிகள்...


மேகக்குடம் உடைந்து
மழைத் தண்ணீர்
மண்ணை நோக்கி
கசிந்துருக தொடங்கியது...!!!

கருவானத்தையும்,
காற்றையும் கிழித்துக்கொண்டு
மழைத்துளிகள்
வந்துகொண்டிருந்தது...!
விண்வெளியின் வழிகளில்...

மழைத்துளிகள்
மகிழ்ச்சி பயணம் செய்துகொண்டிருந்தது...!
மண்ணை நோக்கி...

காற்றின் இரைச்சலுக்கிடையிலும்
சில்லென்ற மழைத்துளி,
சிரிக்கும் சத்தம்
சிலுசிலுவென கேட்டது...!

மேகத்தை பிரிந்த
பிரிவின் வருத்தம்,
இன்று ஏனோ
இந்த மழைத்துளிகளுக்கு
சிறிதளவும் இல்லை...!

மழைத்துளியின்
மகிழ்ச்சியின் ரகசியம் - என்
மனதிற்கு ஏனோ புரியவில்லை...!

மறைந்திருந்து நோட்டமிட்டேன் நான்...!

பூமியை அடைந்ததும் ஏனோ
புதிய கவலையின் சுவடுகள்...!
மழைத்துளிகளின் முகத்தில்...

சாலையோர மழைத்துளிகளில்
இப்போது எஞ்சியிருப்பது,
ஏமாற்றத்தின் கவலைகள் மட்டுமே...

சாலையில் விழுந்த
மழைத்துளிகளின்,
முந்தைய மகிழ்ச்சிக்கும்,
இப்போதைய வருத்தத்திற்குமான
காரணம் புரிந்தது எனக்கு...!

ஆம்...!
மழைத்துளிகள்
ஏமாற்றமடைந்தது உண்மையே...!!

அந்த சாலையில்
என்னவள்
நடந்துபோய்க்கொண்டிருந்தாள்...!
கையில் குடையோடு...

----அனீஷ் ஜெ...

17 Feb 2011

பலிக்காத கனவு...

பலிக்காத கனவு...


அவள் என்னை
வேண்டாமென்று சொன்ன
அந்த நொடி
இட நெஞ்சில் இதயம்
வெடித்துவிட்ட வலி...!

ஒருதலையாய் காதலிப்பவனுக்கு சொல்லும்
ஒற்றை பதிலல்லவா இது...!
அவளும் நானும்
ஓருயிராய் ஆனபின்பும்
அவள் உதட்டில் இது
ஓடி வந்து அமர்ந்தது எப்படியோ...!!

வேண்டாம் என்று என் காதலை
வேரோடு சாய்த்துவிட்டாள்...!
அடி நெஞ்சில்
ஆணிவேரை ஊன்றி நிற்கும்
அவள் காதலை நான் என்ன செய்வது...?

வங்க கடலும்
கங்கை நதியும் இப்போது என்
கண்ணிர் துளிகளாய்...

சாகும் வரை - நான்
உன்னோடிருக்க வேண்டுமென,
என்றொ ஒருநாள்
என்னிடம் அவள்
சத்தியம் வாங்கிக்கொண்டதாய் ஞாபகம்...!

அவள் என்னோடிருக்கும் வரைதான்
நான் உயிரோடிருப்பேன் என்பதை
இனிமேல் எப்படி நான்
அவளுக்கு புரியவைப்பது...!

கடற்கரையோர காற்றில்
தனிமையை ரசித்திருக்கிறேன்...!
காகிததுண்டில்
கவிதை கிறுக்கும் நேரங்களிலும்
தனிமையை ரசித்திருக்கிறேன்...!

ஆனால்,
அவள் இல்லாத தனிமைகள் - என்
அடிநெஞ்சில் வலிக்கிறதே...!
நிலவில்லாத இரவிலும் - அவள்
நிழல் தேடி மனம் தவிக்கிறதே...!!

மறந்து சென்றுவிட்டவளை - என்னால்
மறக்க முடியவில்லை...!
அவளை சுமந்த - என்
இதய கிண்ணத்தில்
இன்னும் மிச்சமிருக்கிறது...!
கொஞ்சம் நினைவு பருக்கைகள்...
 

அவள் நினைவுகள் முடிந்தால்
என் இதயம் மறுபடியும்
காலியாகியும் விடலாம்...!
இல்லை கல்லாகியும் விடலாம்...!

காதலில் நான்
கற்றுக்கொண்டது,
காதலை மட்டும்தான்...

காதலொன்றும்
கடவுள் இல்லை...!

இமை மூடி
இருட்டில் காணும்
கனவுதான் காதல்...!

சிலருக்கு பலித்துவிடும்...!

எனக்கு என் காதலோ
பலிக்காத கனவு...

----அனீஷ்...

14 Feb 2011

காதல்...

காதல்...


உயிரோடு உயிர் வந்து
மோதிய கணத்தில்
உடைந்து உறைகிறது...!
காதல் துளிகள்...

இதயம் சுருங்கி விரிகையில்
உடலெங்கும்
உருகி பாய்கிறது...!
ரத்தத்தோடு காதலும்...

சிறகுகளில்லாமலே
சிகரங்களுக்கும் உயரே
படபடவென பறக்கிறது...!
காதல் தீண்டலில் மனது...

கோபத்தை விடவும்
அன்பைதான் அதிகம்
அடையாளம் காட்டியிருக்கிறது..!
ஊடல் பொழுதுகள்...

மெல்லிய மவுனங்கள்...!
செல்ல சண்டைகள்...!!
கொஞ்சல்கள் - சில
கெஞ்சல்கள்...!!!
காதலில் மட்டுமே
இவையெல்லாம் அழகாக...

உச்சிவெயில் நிலா....!
கொஞ்சிபேசும் சிலை...!!
விழிமீன் - சிரிக்கும்
இதழ்வழி தேன்...!!
பொய்களும் ரசிக்கப்படுவது
காதலில் மட்டும்தான்...

வெயிலில் நனைவதும்
மழையில் வியர்ப்பதும்
காதலிலே சாத்தியம்...!
கவிதைகளே அதற்கு சாட்சியம்...!!

காதல்
சிரிப்பையும் தருவதுண்டு
சிலசமயம் கண்ணீரையும் தருவதுண்டு...!
சிலரை கரை சேர்த்ததுண்டு...!
சிலரது கனவுகளை தகர்த்ததுண்டு...!!

வலிகளை தருவதென்று தெரிந்தாலும்
வரிந்துகட்டிக்கொண்டு நிற்கிறது மனது...!
காதல் செய்ய...

காரணம்...
காதலில் மட்டுமே உணரப்படுகிறது...!
வலிகள் கூட சுகமாக...

----அனீஷ்...

10 Feb 2011

ஹைக்கூ கவிதை - உன் கண்கள்

ஹைக்கூ கவிதை - உன் கண்கள்


வெள்ளை வானம்...!
கறுப்போடு கலந்த
நீல வண்ணத்தில்
நிலவுகள் இரண்டு...!!
அதிசயமாகிறது என் இரவுகள்...!!!
கனவில் உன் இரு கண்கள்...


***********************************************************************************


எச்சிலின் அடையாளங்கள்...!
ஆனாலும் எனக்கு
துடைக்க மனமில்லை...!!
என் கன்னத்தில்
உன் உதட்டுச் சுவடுகள்...

----அனீஷ் ஜெ...


4 Feb 2011

என் தோழியாய் நீ...

என் தோழியாய் நீ...

தனிமையான
என் பயணங்கள்...!

பாலைவனமாம் என் மனதில்

பருவமழை போல்
பெய்தாய் நீ...!!

தனிமையில்

நடந்த எனக்கு
நட்புக்கரம் தந்து
நிழல் போல் துணையானாய்....!

உன் சந்தோஷங்களை

எனக்கு பரிசளித்து விட்டு
என் கவலைகளை நீ
களவாடிச் செல்கிறாய்....!

சின்னதாய் இப்போது ஒரு

சிறகு முளைத்ததாய் உணர்வு...!
உன் நட்பு கிடைத்தபின்
உயரத்தில் பறக்கிறேன் நான்...!!

நட்பாய் நீ என்

நரம்புகளில் பாய்கிறாய்...!
தோழியாய் நீ என்
சுவாசமாகிறாய்...!!

உன் நட்ப்பென்னும்

விரல் பிடித்து நடப்பதால்-இனி
விண்வெளிக்கு மேலே சென்று
விளையாடி வருவேன்...!

நட்ப்போடு சாய்ந்துகொள்ள-உன்

தோள்கள் இருப்பதால் இனி
தோல்விகளை கூட
தோற்கடித்து விடுவேன்...!!

ஆகாயம் ஒருநாள்

அழிந்து போகலாம்...!
உலகம் ஒருவேளை
உடைந்து போகலாம்...!!

ஆனாலும்

என் ஆயுள் முடியும் வரை
எனக்கு வேண்டும்...!
என் தோழியாய் நீ....

----அனீஷ் ஜெ...