29 Jul 2012

கவிதைப் புத்தகம் !

கவிதைப் புத்தகம் !


உனக்காய் துடிக்கும்
என் இதயத்தின் ஒலியையும்,
உன்மேல் நான் கொண்ட
காதலின் அளவையும்
உன்னைவிட நன்கு அறியும்...!
என் பேனா முனை கீறல்களையும்
என் காதலின் கிறுக்கல்களையும்
சுமந்துகொண்டிருக்கும் - என்
கவிதைப் புத்தகம்...

----அனீஷ் ஜெ...

5 Jul 2012

கனவு பொய்பட வேண்டும் !

கனவு பொய்பட வேண்டும் !

  
அது ஒரு
மழைக்கால இரவு...!

அடுத்தநாள் காலை
என்னை சந்திப்பதாய் சொன்னவள்
எதிர்பாராத விதமாய்
என் எதிரே வந்தாள்...!

என்னை கண்டதும் பூக்கும்
அவள் புன்னகை முகமோ
வாடிப்போயிருந்தது...!

என்னை பார்க்காதவள் போல்
முகம் திருப்பி நின்றாள் அவள்...!

அவளுடன் வந்த
இன்னொரு பெண்ணின் முகம்
எங்கேயும் பார்த்ததாய்
எனக்கு ஞாபகம் இல்லை...!
அது அவளின் தோழியாக இருக்கலாம்...!!

அவள் அருகில் சென்று
அவளின் பெயர் சொல்லி அழைத்தும்
எதுவும் பேசவில்லை அவள்...!

காகிதமொன்றை - என்
கைகளில் திணித்துவிட்டு
கண்ணீர் துடைத்தபடியே
கடந்து சென்றாள் அவள்...!

பிரித்து படித்ததும் - என்
உயிரே போய்விடும் போலிருந்தது...!
அது அவளின் திருமண அழைப்பிதழ்....

என் மூச்சே மெல்ல மெல்ல
நின்றுவிடுவது போல உணர்ந்தேன்...!
அதற்கு மேல் எனக்கு
எதுவும் ஞாபகமில்லை...!

அடுத்தநாள் காலை
விடிந்தபின்தான் தெரிந்தது..!
விடிய விடிய
நான் கண்டது கனவென்று...

கடவுளே - இந்த
கனவு பொய்பட வேண்டும்....

----அனீஷ் ஜெ...