30 Dec 2011

நிரந்தர காதலி !

நிரந்தர காதலி !


அப்பா அடிக்கடி
அன்பாய் சொல்லியும் - உன்னை
விட்டுவிலகவில்லை நான்...!

தினமும்
ஆயிரம் முறை
அம்மா திட்டியும்,
உன்னை இழக்க
உடன்படவில்லை மனது...!

ஆனால் அவள்
பலமுறை சொன்னதும்
படுபாவி நான்,
உன்னை என்னிலிருந்து
தூக்கிப்போட்டேன்...!

இன்று அவளோ
என்னை தூக்கிப்போட்டுவிட்டு
தொலைதூரத்தில் எங்கோ
தொலைந்து போய்விட்டாள்...!

மறுபடியும் மனது
உன்னையே தேடுகிறது...!

இன்னொருமுறை உன்னிடம் நான்
என் இதயம் தொலைத்தால்,
என்னை பழிவாங்க எண்ணி,
என் நுரையீரல் சுவர்களில்
உன் கறுப்பு எச்சில்களை
காரி உமிழ்ந்துவிடாதே....!

என் விரல்களை கோர்த்தபடி,
என் உதடுகளில் உரசியபடி
என் உயிர் மூச்சோடு மட்டும்
கலந்துவிடு ...!

சிகரெட் என்னும்
என் நிரந்தர காதலியே...

----அனீஷ் ஜெ...

28 Dec 2011

புரியாத பதில் !

புரியாத பதில் !


கோயில், தெருவென
கூட்ட நெரிசலிலும்
எனைத்தேடி அலையும்
உன் கண்கள்...!

நம் கண்கள்
சந்தித்துக்கொண்டால் - உன்
கன்னங்கள் இடும்
வெட்கக்கோலங்கள்...!

எனை கண்டதும்
உன் உதடுகளில்
முட்டி முளைக்கும்
புன்னகை பூக்கள்...!

எதுவும் எனக்கு
புரியவில்லை பெண்ணே...

நீ என்னை
காதலிக்கிறாயா...? - இல்லை
நான் உன்னை
காதலிக்க சொல்கிறாயா...?

----அனீஷ் ஜெ...

25 Dec 2011

நான் உன்னை காதலிக்கிறேன்...

நான் உன்னை காதலிக்கிறேன்...


எத்தனையோமுறை
என் வழிகளில்
எதிர்பட்டிருக்கிறாய் நீ...!
ஆனால் இப்பொழுதுதான்
அதிசயமாய் அடிக்கடி என்
விழிகளில் விழுகிறாய்...!!

உன்
பார்வை மழைக்காகவே
பாலைவனமாகிறது மனது...!

உன்
புன்னகையை பிடித்து
பூக்கள் செய்ய - நான்
புதிதாய் கற்றுக்கொள்கிறேன்...!

கண்கள் திறந்தே
கனவு காண்பதும்,
உறக்கத்திலும்
உன்னை நினைப்பதும்,
எனது புதிய அனுபவங்கள்...!

எந்த பார்வை
என்னை சாகடிக்கிறதோ,
உந்தன் அதே பார்வைதான் - என்
உயிரையும் வளர்க்கிறது...!

உனக்காய் காத்திருக்கும்
என் கால்கள்,
ஒவ்வொருமுறையும்
உன்னை நோக்கி
பயணிக்கும்போதும்,
என் இதயம்
சத்தமில்லாமல்
உரக்க கத்துகிறது...!
நான் உன்னை காதலிக்கிறேன்...

----அனீஷ் ஜெ...

22 Dec 2011

இனி எப்பொழுது?

இனி எப்பொழுது?


உன் குரலை
காற்று இன்னும் என்
காதில் சொல்லவில்லை...!

உன் நிறமென்ன என்று
வானவில் என்னிடம்
வந்து சொல்லவில்லை...!

அழகாய் இருப்பாயா..?
அதிகம் பேசுவாயா...???
தென்றலாய் சிரிப்பாயா..?
தேவதை போல் இருப்பாயா...??

எனக்கு உன்னை பற்றி
எதுவும் தெரியாது...!
எழுத்தில் நீ சொன்னால் கூட
எனக்கு எதுவும் புரியாது...!!

கற்பனையில் மட்டுமே
நான் உன்னை காண்கிறேன்...!
கனவில் மட்டுமே
உன் குரல் கேட்கிறேன்...!!

உன் கோபங்கள்...!
உன் சிரிப்புகள்...!
அத்தனையும்
வெறும் எழுத்துகளாக,
அதையே நான் ரசிக்கிறேன்...!

கணினி திறந்து,
கண்கள் வெறித்து
காத்துக்கொண்டிருக்கிறேன் நான்...!
இனியெப்பொழுது - நீ
இதிலே தெரிவாய்...?

என் இணையத் தோழியே...

----அனீஷ் ஜெ...

19 Dec 2011

சின்ன கவிதைகள் - இரவு பயணம்

சின்ன கவிதைகள் - இரவு பயணம்


மேடு பள்ளங்கள்...!
வளைவு நெளிவுகள்...!!
இருந்தாலும் நான்
இரவு முழுவதும் பயணிக்கிறேன்...!
உன் தேக பாதைகளில்...


***********************************************************************************




உதடுகள் உரசிக்கொள்ள
உயிருக்குள் தீப்பிடித்தது...!
பற்றி எரிந்ததோ நாம்...!!
முத்தம்...

***********************************************************************************



தெரிந்தே தினம்தினம்
மோதிக்கொள்கின்றன
என் பார்வைகள்...!
உன் துப்பட்டா கோபுரங்களில்...

----அனீஷ் ஜெ...






15 Dec 2011

வழித்துணையாய்...

வழித்துணையாய்...


அழுகையிலே இது
ஆரம்பிக்கும்...!
அழுகையோடு இதன்
ஆட்டமும் நிற்கும்...!!

தொலைக்காமலே ஒரு
தேடல் நடக்கும்...!
தொடும்தூரமும் சிலசமயம்
தொலைவில் கிடக்கும்...!!

தோல்விகளில்
தோளும் கிடைக்கும்...!
சிலசமயம் சில கால்கள்
எட்டி உதைக்கும்...!

கனவுகள் சிலநேரம்
நிஜமாக மாறும்...!
நிஜங்களும் பலநேரம்
நினைவாகி போகும்...!!

இழப்புகளும்,
இமைபொழியும் கண்ணீரும்
இங்கு ஏராளம்...!
பிழைகளும்,
பிழைப்புக்கான மோதல்களும்
இங்கு தாராளம்...!!

அடுத்தவனின் அழுகையில் பலர்
ஆரவாரமாய் சிரிக்கலாம்...!
சிரிப்பை கண்டாலோ
சிலர் கண்ணீரும் சிந்தலாம்...!!

அடுத்தது என்ன இதில்
அறிய முடியவில்லை...!
கடந்து போனதை மறுமுறை
காண வழியுமில்லை...!

முரண்பாடுகளை 

முதுகில் சுமந்துகொண்டு,
முழுநீள வழித்துணையாய்,
நம்மோடு பயணிக்கிறது...!
நமது வாழ்க்கை...

----அனீஷ் ஜெ...


13 Dec 2011

பொய்த்துப்போனவைகள்...

பொய்த்துப்போனவைகள்...


உன் மடியில்தான்
உயிர் விடுவேன் என சொன்ன
உன்னை நான்
கட்டியணைத்து
கண்ணீர் துடைத்தது - எனக்கு
இன்னும் ஞாபகமிருக்கிறது...!

காதலித்தவனை
கழற்றிவிட்டு செல்லும்
மற்ற பெண்களை போல்
என்றுமே நீ இருப்பதில்லை என
அன்று நீ சொன்னதையும்
நான் ரசித்து நின்றேன்...!

என்ன வந்தாலும்,
வானமே இடிந்தாலும்
வாழ்வது உன்னோடுதான் என
நீ பேசிய வார்த்தைகள்
நீண்ட நாட்கள் தாண்டியும்
இன்றும் என் காதில் ஒலிக்கிறது...!

உன் வார்த்தைகள் அனைத்தையும்
நம்பிக்கொண்டிருந்த என்னால்
இன்னும் நம்பமுடியவில்லை...!
உன் காதலோடு சேர்த்து
உன் வார்த்தைகளும்,
உன் வாக்குறுதிகளும் - இன்று
பொய்த்துப்போய்விட்டது என்பதை...

----அனீஷ் ஜெ...



9 Dec 2011

அவனும்... அவளும்...

அவனும்... அவளும்...


ஒல்லியான தேகம்...!
மெல்லிய இடை...!!
நிலா முகம்...!
புன்னகைக்குள்ளே
மறைந்துகிடக்கும்
உதடுகள்...!!
அவள் அழகாகவே இருந்தாள்...

முழுமையான உயரம்...!
முகமெல்லாம் குறுந்தாடி...!!
கலவரம் கலக்காத
பார்வைகள்...!
அவனும் அவளுக்கு
பொருத்தமாகவே இருந்தான்...!!

அவளுக்காக அவன்
காத்திருக்கிறான்...!
அவள் பெயரையே
கவிதை என்கிறான்...!!
அவன் அவளை
காதலிப்பதென்னவோ
உண்மைதான்...

அவள் அவனை
கண்டுகொள்ளாமல் சென்றாலும்,
காலை முதல் மாலை வரை
பின்தொடர்கிறான்...!

அன்று...
நகரப்பேருந்தில்
நகர முடியாத நெருக்கத்தில்,
படிக்கட்டில் அவன்...!
பேருந்தினுள் அவள்...!!

ஆசை காதலோ
அவள் அருகில்
அவனை போக சொன்னது...!

அடித்துப்பிடித்து
அவளருகில் சென்றான்
அவன்...!

இப்போது அவன்
இதயத்தில் பூட்டிவைத்திருந்ததை,
உதடுகளால் திற்ந்தான்...!

உன்னை நான்
உயிராய் காதலிக்கிறேன் என்றவன்,
என்னை நீ காதலிக்கிறாயா என
திருப்பி கேட்டான் அவளிடம்...!

இல்லை என்று
இதயம் தர மறுத்தாள் அவள்...!

இன்னொருமுறை கேட்டான்...!

முறைத்துப்பார்த்த அவளிடம்
தயங்கியபடியே கேட்டான்...!
வேறுயாரையாவது
விரும்புகிறாயா என்று...

அவள்
கைநீட்டி காண்பித்தாள்...
அடுத்த பேருந்து நிறுத்தத்தில்
அவளுக்காய் காத்துநின்ற
என்னை...

----அனீஷ் ஜெ...

5 Dec 2011

உன்னை சந்தித்த பொழுதில்...

உன்னை சந்தித்த பொழுதில்...


எத்தனையோ நாளுக்குப்பின்,
எதிர்பாராத விதமாய்
நான் உன்னை இன்று
கடைத்தெருவில் சந்தித்தேன்...!

திடீரென பார்த்தாலென்னவோ
அடிநெஞ்சில் எனக்கு
அதிர்ச்சியின் அலைகள்...!
உனக்கும்தான்...

என் முகத்தையே பார்த்து நின்ற
உன் முகம் கண்டதும்
நான் முகம் திருப்பினேன்...!

உன் பார்வையில்
என்மேல் ஏதோ
பரிதாபம் தெரிந்தது...!

உனக்கு எதிர்திசையில்
வேகமாய் விலகி நடந்தேன்...!

பாதி தூரம் சென்றபின் - என்
பாதி மனது சொன்னது
உனது அருகில் வந்து
நலம் விசாரித்திருக்கலாம் என்று...

ஆனாலும் ஏதோ ஒன்று தடுக்க
அப்படியே வெகுதூரம் நடந்து
உன்னை விட்டு மறைந்தேன்...!

உன்னிடம் நான் ஓடி வந்து
நலமா என கேட்பேன் என
நீ எதிர்பார்த்திருக்கலாம்...!

ஆனால்...
உன்னருகில் நான் வந்து
நலமா என கேட்டால்,
நீ யாருக்கோ பயந்து
நீ யார் என திருப்பி கேட்டால்,
உன்னிடமும்,
உன்னருகில் நிற்கும்
உன் கணவனிடமும்,
நான் எப்படி சொல்வது?

என்றோ ஒரு நாள் - நீ
ஏமாற்றிவிட்டு சென்ற - உன்
முன்னாள் காதலன்தான்
நான் என்று...

----அனீஷ் ஜெ...

28 Nov 2011

கல்லூரியில் இன்று...

கல்லூரியில் இன்று...


கல்லூரிக்கே இன்று
வராமலிருந்திருக்கலாம் என
கவலையோடு
நினைத்துக்கொள்கிறேன்...!

கலகலவென கதைபேசி,
அருகிலே இருக்கும்
அன்பு நண்பர்கள் கூட - இன்று
அன்னியமாய் தெரிகிறார்கள்..!

அறுசுவையில் உண்டாலும்,
மதிய உணவில்
ஏதோ ஒன்று குறைவதாய்
என் மனசு பிதற்றுகிறது...!

தூக்கம் வந்தாலும்
வகுப்பறையில் தூங்காதவன்,
தூக்கம் வராமலே - இன்று
தூங்க முயற்சிக்கிறேன்...!

எனக்கு பிடித்த
கணக்கு வாத்தியார் முதல்,
என்னை பிடிக்காத
கம்ப்யூட்டர் ஆசிரியை வரை
அனைவரும் இன்று
எதிரியாய் தெரிகிறார்கள்...!

இன்றைய பகல்பொழுது
வழக்கத்தை விட
நீண்டது போல்
ஒரு உணர்வு...!

இப்போதாவது நீ
புரிந்துகொண்டாயா?

நீ கல்லூரிக்கு வராத நாட்களில்
வெற்றிடம் விழுவது,
நீ அமரும்
கடைசி பெஞ்சில் மட்டுமல்ல...!
என் இதயத்திலும்தான் என்று...

----அனீஷ் ஜெ...

25 Nov 2011

காதல் எதிரி !

காதல் எதிரி !


கல்லூரியில்தான்
இவர்களின் காதல்
ஆரம்பமாயிருக்கலாம்...!

இரவு முழுவதும்
இவள் அவனுடன்
செல்போன் வழியே
காதல் வளர்த்திருக்கலாம்...!

சினிமா...!
சிலசமயம் கடற்கரை..!!
இங்கெல்லாம் இவர்கள்
ரகசியமாய்
சுற்றி திரிந்திருக்கலாம்...!

காதல் சத்தியங்கள்...!
திருமண வாக்குறுதிகள் என
இவர்களில் காதல்
இன்னும் வலிமையாகியிருக்கலாம்...!!

அன்று...
சமையலறையில்
சமைத்துக்கொண்டிருந்த
அம்மாவிடம்
அவள் சத்தமில்லாமல் சொன்னாள்...!
அம்மா நான் ஒருவனை
காதலிக்கிறேன் என்று...

அன்று மாலை...
காதலனோ
காதலியுடன் சேர நடத்தும்,
கடைசிகட்ட போராட்டத்தை
தொலைக்காட்சி சினிமாவில்
கவலையோடு
பார்த்துக்கொண்டிருந்த என்னிடம் - என்
காதல் மனைவி சோகத்துடன் சொன்னாள்...!
உங்க பொண்ணு
யாரையோ காதலிக்கிறாளாம் என...

அடுத்த நொடியே
கோபத்துடன் கத்தினேன் நான்...

என்றோ ஒருநாள்
என் காதல் மனைவியை
கைப்பிடிக்க
காதலை புனிதம் என்றவன்,
இப்பொழுது
இந்த கோப நொடிகளில்,
என் மகளின் காதல் உடைக்கும்
காதல் எதிரியாய்
மாறிக்கொண்டிருந்தேன்...

----அனீஷ் ஜெ...

23 Nov 2011

ஆறாம் விரல்...

ஆறாம் விரல்...


தீண்டிப்பார்க்கும் மனது...!
தூண்டில்போடும் வயது...!!

தொட்டுவிட்டதாலென்னவோ
விட்டுவிட மனமில்லை...!

உணர்ச்சிகளுக்கு
உணவு கொடுக்க,
விரல்களுக்கிடயில்
இருப்பிடம் கொடுத்தேன்...!

இன்பத்தின் இருப்பிடத்தை
பற்ற வைத்ததும்,
இரத்தம் சூடேறியது...!

உயிர் மூச்சு
உள்ளே வர,
வெள்ளை மழை
வெளியேறியது...!

ஏதோ சுகத்திற்குள்
சுருண்டுகொண்டேன்...!

ஆறாம் விரலாய் இது
அடிக்கடி முளைக்க,
அதற்கு நானும்
அடிமையாகி போனேன்...!

விளைவுகளை அறிய
விருப்பமில்லாமல்,
இன்றும்
பற்ற வைத்துக்கொண்டிருக்கிறேன்...!
என் ஆயுளை அபகரிக்கும்
இந்த சிகரெட்டை...

----அனீஷ் ஜெ...

21 Nov 2011

இருட்டு முகம் !

இருட்டு முகம் !


என் சிறுவயது முதலே
நான் கேட்கத்தொடங்கிய
அந்த எதிர்வீட்டு குரல்...!

ஒரே பள்ளிக்கூடம்..!!
எதிரெதிர் வீடு...!!
என் தங்கையின் தோழி...!
அத்தனையும் இருந்தும்,
அந்த சிறு வயதில்
அந்த குரலுக்கு சொந்தக்காரி
என்னிடம் பேசியதே இல்லை...!

அவள் என்னிடம்
பேசவே பயப்பட்டிருக்கலாம்...!

வருடங்கள் பல தாண்டின...!

எதிர்வீட்டிலிருந்து
எப்போதும் கேட்கும்
அந்த குரல்
அடிக்கடி காணாமல்போய்கொண்டிருந்தது...!

தங்கையிடம் கேட்டபோது,
அவள் கல்லூரி போவதாகவும்,
விடுதியில் தங்கி விட்டு
விடுமுறை நாட்களில் மட்டும்
வீடு வருவாதாகவும் சொன்னாள்...!

காதுகளை சுற்றிவரும்
துருதுருவென்ற அந்த குரலை
கேட்க வேண்டும் போலிருந்தது...!

அன்றொருநாள்...
அவள் விடுமுறைக்கு
வீடு வந்திருந்தாள்...!

சட்டென
என் முன்னே வந்த அவள்
என் பெயரை அழைத்து
எப்படியிருக்கிறாய் என கேட்டாள்...!

இத்தனை ஆண்டுகளில்
இதுவரை அவள்
இப்படி என்னிடம் கேட்டதில்லை...!

அன்று என்னிடம்
அவள் நிறையவே பேசினாள்...!

இப்பொழுதெல்லாம்
விடுமுறைக்கு வரும்போது
நீண்ட நேரம் என்னிடம் பேசுகிறாள்...!

சில சமயங்கள் - என்
விரல் கோர்த்தபடி
வீதியில் நடக்கிறாள்...!

மனதிற்குள் மகிழ்ச்சி...!

தட்டுத்தடுமாறி விழுந்த
தடுமாற்றத்தின் வலிகள்...!
அம்மா அப்பா முதல்
அத்தனை பேரையும்
இருட்டோவியமாய்
உயிருக்குள் வரைந்த
உணர்வின் வலிகள்...!!

இந்த வலிகள் அனைத்தையும்
தாங்க பழகிக்கொண்ட என் மனது,
இப்பொழுது முதன்முதலாய்
இவள் முகம் காண ஏங்குகிறது...!

என் மனதிற்கு
எப்படி நான் புரியவைப்பது...?
குருட்டு மனிதன் எனக்கு
இவள் முகமும்
இருட்டாய்தான் தெரியும் என்பதை...

----அனீஷ் ஜெ...

18 Nov 2011

அவள் அழகி !

அவள் அழகி !


அவளை யாரும்
அழகியென்று சொல்லமாட்டார்கள்...!

முகத்தில் முகப்பருக்களின்
முதிர்ச்சி புள்ளிகள்...!

கவர்ச்சி இல்லாத - சின்ன
கண்கள் இரண்டு...!

களைத்து போனது போன்று
கறுப்பு நிற தேகம்...!

ஆர்ப்பாட்டமில்லாத
அப்பாவித்தனமான தோற்றம்...!

ஆனாலும்,
அவளை எனக்கு பிடித்திருந்தது...!

உங்களுக்கு என்னை
உண்மையிலே பிடித்திருக்கிறதா என
அவள் என்னிடம்
ஆயிரம் முறை கேட்டிருப்பாள்...!

பலமுறை பாசத்துடன்
பதில் சொல்லி விடுகிறேன்...!
சிலசமயம் கோபத்துடன்...

அன்று...
புதிதாய் வாங்கிய
புத்தாடையை கட்டிக்கொண்டு
என்னிடம் கேட்டாள்
எப்படியிருக்கிறது என்று...

நீ எப்போதும் அழகுதான்...!
இன்று
இன்னும் கொஞ்சம் அழகு என்றேன்...!!
அவளை திருப்திபடுத்த...

மெல்லிய வெட்கத்துடன் - அவள்
சின்னதாய் சிரித்தாள்...!

அவளின் அந்த
சந்தோஷ புன்னகையில்,
எனக்கு மட்டும் - அவள்
அழகியாக தெரிந்தாள்...

----அனீஷ் ஜெ...

16 Nov 2011

நான் உன்னை நம்புகிறேன்...

நான் உன்னை நம்புகிறேன்...


இமை மூடினாலும்,
கனவில் தேடினாலும்
காண்பது உன் முகமே என்கிறாள்...!

உனை பிரிந்தால்
உயிர் பிரியுமென
ஏதேதோ உளறுகிறாள்...!

யார் எதிர்த்தாலும்,
காதலை எதிர்த்து
போர் தொடுத்தாலும்,
உன்னிடமே கைதியாவேன் என
வசனம் பேசுகிறாள்...!

ஆயுள் முடியும் வரை கூட
அன்பே உனக்காய் காத்திருப்பேன் என
அடிக்கடி சொல்கிறாள்...!

தூக்கத்தை
தொலைத்தேன் என்கிறாள்...!
தூரத்திலிருந்தாலும்
நினைப்பேன் என்கிறாள்...!!

அவள் என்னிடம் சொல்லும்
அத்தனையும்
பொய்யென தெரிந்தும்,
அவளிடம் நான்
ஒற்றை பொய் மட்டுமே சொல்கிறேன்...!

“நான் உன்னை நம்புகிறேன்...”

----அனீஷ் ஜெ...

13 Nov 2011

இதயம் விற்பனைக்கு...

இதயம் விற்பனைக்கு...


ஆங்காங்கே
வலியின் உணர்வுகள்...!

சில இடங்களில்
ஏமாற்றத்தின்
அடையாளங்கள்...!

துடிப்பதற்கு மட்டுமல்ல...!
அழுவதற்கு கூட
இதற்கு தெரியும்...!

எல்லாவற்றையும்
எளிதில் நம்பிவிடும்...!
ஏமாற்றங்களை கூட
தாங்கிவிடும்...!!

நேசிக்கவும்,
நேசிப்பவர்களுக்கும் சேர்த்து
சுவாசிக்கவும் தெரியும்...!

நீங்கள் தரும்
அன்பு மட்டுமே - இதன்
அதிகபட்ச விலை...!

திருப்பி தரமாட்டோம் என்ற
உத்திரவாதத்துடன்,
யார் வேண்டுமானாலும்
உரிமையாக்கி கொள்ளலாம்...!

என் இதயம் விற்பனைக்கு...

----அனீஷ் ஜெ...

11 Nov 2011

இன்று ஒன்று 11/11/11

இன்று ஒன்று 11/11/11


உன்
ஒற்றை சிரிப்பில்
ஓராயிரம் முறை
செத்துப்பிழைக்கிறது...!
என் ஒற்றை இதயம்...

ஒருகோடி பூக்களை
ஒன்றாய் தூவும் - உன்
இதழ் புன்னகையை - நான்
ஒன்றாய் சேர்த்து
என் நெஞ்சினோரம்
ஒரு மலர்வனமாய்
கோர்த்து வைக்கிறேன்...!

ஒற்றையடி பாதையில்
ஒரே குடையின் கீழ் - நாம்
ஒன்றாய் நனையும் போது நமக்குள்
ஒருகோடி சூரியனின் வெப்பம்...!

உன் ஒரு முத்தத்திற்காக
ஒருவருக்கும் தெரியாமல்
ஒருகோடி யுத்தம் செய்கிறது...!
என் ஒற்றை மனது...

ஒரு சின்ன கவிதை சொல்லி,
ஒரு கையால் உன் கன்னம் கிள்ளி,
ஒவ்வொரு நிமிடமும்
உனக்குள் நிறைகிறேன் நான்...!

ஓராயிரம் ஜென்மம்
நான் கொண்டாலும்,
உலகமே ஒருநாள்
உடைந்து துண்டானாலும்,
என் ஒற்றை உயிரும்
ஒரே காதலும் - எனது
ஒற்றை ஜீவன் உனக்கே...

----அனீஷ் ஜெ...

9 Nov 2011

மறந்துவிட சொன்னவளுக்கு...

மறந்துவிட சொன்னவளுக்கு...


நீ மறந்துவிட சொன்ன நொடியின்,
மரண வலியின் நினைவுகளுடன்
இன்னும் நான்...!

உன் ஞாபகங்களை
உதறித்தள்ள நினைக்கும்
ஒவ்வொரு நொடியிலும் - நான் தான்
ஒரேயடியாய் தோற்றுப்போகிறேன்...!

உன்னை மறப்பதற்காக - நான் உன்னை
நினைக்க மறுக்கும் நிமிடங்களில்,
ஆக்ஸிஜனில் கூட
அமிலத்தை உணர்கிறேன்...!

இமைகளை
இறுக்கி அடைத்தாலும்,
இதயத்தை
இரண்டு துண்டாய் உடைத்தாலும்
நீ தான் தெரிகிறாய்...!

மறந்துவிட சொன்னவளே - என்னை
மன்னித்துவிடு...!
கடைசியாய் நீ என்னிடம்
விரும்பிக்கேட்டதை - நான்
விரும்பினால் கூட - என்னால்
நிறைவேற்ற முடியாது...!

ஏனென்றால்...
உன்னை நான்
மறப்பதென்பது - நான்
இறக்கும்வரை சாத்தியமில்லை...!

----அனீஷ் ஜெ...

7 Nov 2011

உணர்ச்சிப்பிழை !

உணர்ச்சிப்பிழை !


தவிர்க்க முடியாத உணர்ச்சிகள்...!
தடுமாறிப்போன நிதானம்...!!

பாதங்கள் பயணிக்க தொடங்கின...!
அவளின் வாசல் தேடி...

முதுகுப்பரப்பில் முத்தமிட்டு
உடலோடு உடல் உரசி
சூடேற்றிக்கொண்டேன் என்னை...!

எல்லை மீறியபோதும்
எதிர்க்கவில்லை அவள்...!
புரிந்துகொண்டேன் அவளை...!!
தொழிலுக்கு
துரோகம் செய்யாதவள் அவள்...

மோக மழை
மேகமாய் பெய்ய,
தாகம் தணித்தது...!
என் தேகம்...

காசுகொடுத்து
கை கழுவிவிட்டு
புறப்பட்டேன் அங்கிருந்து...!
என்னுடன் வந்தது
எய்ட்ஸ்...

----அனீஷ் ஜெ...

5 Nov 2011

கனத்த மனதும்... கண்ணீர் துளியும்...

கனத்த மனதும்... கண்ணீர் துளியும்...


நீ என் பெயர் சொல்லி
அழைப்பதுபோல் ஒரு உணர்வு...!
பாதி தூக்கத்திலும்
பதறியடித்து எழுகிறேன்...!

காலையில் கண்விழித்ததும்
நெஞ்சோரம் ஒட்டிக்கொள்ளும்
உன் நினைவு துளிகள்
கசக்கி பிழிகின்றன...!
என் உயிரை...

நம் காதல் கணங்களும்,
நம் கைகோர்த்த பயணங்களும்,
அழியாத சுவடுகளாய்
அடிநெஞ்சில் பதிந்துகிடக்கின்றன...!

கங்கையாய் ஊற்றெடுக்கும்
கண்ணீர்துளிகள் - என்
கன்னம் தொடும்போது - நான்
கனத்த மனதோடு நினைத்துக்கொள்கிறேன்...!

நாம் சந்திக்காமலே இருந்திருக்கலாம்...!
என் கண்ணீர்துளிகளாவது
மிஞ்சியிருக்கும்...!!

----அனீஷ் ஜெ...

31 Oct 2011

மழை நனைகிறது...

மழை நனைகிறது...


ஒற்றைகுடையில்
கொட்டும் மழையில்
நம் நடை பயணம்...!

உன் தேகம் உரசலில்,
மழைக் குளிரிலும் - என்
மனசு சூடாகிக்கொண்டிருந்தது...!

உன்னிடம்
முத்தமொன்று கேட்கச்சொல்லி,
மனசு என்னிடம்
யுத்தம் செய்ய தொடங்கியது...!

கேட்டால் நீ மறுக்கலாம்...!
ஒருவேளை,
முறைக்கவும் செய்யலாம்...!

உன்னிடம் நான்
ஒரு முத்தம் தா என்றதும்,
சத்தமில்லாத வெட்கப்புன்னகை
உன் முகத்தில்பட்டு தெறித்தது...!

இதழ் விரித்து,
குடை மறைத்து
ஒரு முத்தம் தந்தாய் நீ...!

நம் காதல் மழை கொட்ட,
உன் முத்தத்தின் ஈரம் சொட்ட,
குடையில்லாமல்
மழை நனைந்துகொண்டிருந்தது...!

----அனீஷ் ஜெ...

30 Oct 2011

என் காதல் உனக்கு...

என் காதல் உனக்கு...

 முன்குறிப்பு: இந்த வலைத்தளத்தில் இது என் நூறாவது (100-வது) கவிதை பதிவு.


காற்றை பறித்து - அதில்
காதல் விதைத்து - அதை
உன் மூச்சில் நான் சேர்ப்பேன்...!
நிலவை எடுத்து - அதில்
வண்ணம் தொடுத்து
உன் நெற்றிப்பொட்டாய் கோர்ப்பேன்...!!

உன் வழியில் கிடந்து,
சிறு பூவாய் மலர்ந்து,
உன் பாதம் நான் சுமப்பேன்...!
உன் விழியில் விழுந்து,
சின்ன இதயம் நுழைந்து,
உன் உயிரிலே கலப்பேன்...!!

உன் மவுனம் திறந்து,
அழகிய வார்த்தை எடுத்து,
கவிதை நான் நெய்வேன்...!
உன் அழகை பிடித்து
அதில் வண்ணம் குழைத்து
ஒரு வானவில் செய்வேன்...!!

உன் மார்பில் புதைந்து,
நான் என்னையே மறந்து - உனக்குள்
இரவும் முழுதும் நான் தொலைவேன்...!
உன் கன்னத்தில் தவழ்ந்து,
உன் கூந்தலில் சிதைந்து - உன்னில்
என்னை தேடி அலைவேன்...!

உன்னை நெஞ்சோடு அணைத்து,
உன் சோகங்கள் துடைத்து,
உன்னோடு நான் வருவேன்...!
என் இதயம் பிளந்து - அதில்
உன் உயிரை சுமந்து - நான்
என் காதல் உனக்கு தருவேன்...!

----அனீஷ் ஜெ...

26 Oct 2011

அவள் வீட்டு தீபாவளி !

அவள் வீட்டு தீபாவளி !


கையிலே
எரியும் மத்தாப்பும்,
இதழ்களில்
முல்லைப்பூ சிரிப்புமாய்
அவள் வீட்டுமுன் அவள்...!

பச்சை நிற
புதுப்புடவையில்
அவள் அழகாகவே தெரிந்தாள்...!

இன்றாவது அவளிடம் நான்
காதலை சொல்லிவிட வேண்டும்...!

அவளை தாண்டிச்சென்ற என்னை
அவள் கவனித்திருக்கலாம்...!
ஆனாலும்,
வழக்கம்போல் என்னை
கண்டுகொள்ளாதவள் போல் அவள்...!

அவளருகில் சென்று
காதல் சொன்னேன்...!
மவுனத்தை அள்ளி வீசிவிட்டு
விலகி சென்றாள்...!

மறுபடியும் சொன்னதும்
யோசிக்கவில்லை அவள்...!
சட்டென மறுத்தாள்...!

என் பதிலுக்கு காத்திராமல்
ஓடிச்சென்று
பட்டாசை
பற்ற வைத்தாள்...!

பட்டாசுடன் சேர்ந்து
படபடவென
வெடித்துக்கொண்டிருந்தது...!
அவள் காதல் பற்ற வைத்த
என் இதயமும்...

----அனீஷ் ஜெ...

23 Oct 2011

மனைவி !

மனைவி !


நீ தந்த கடிதங்களை
நிலவொளியில் இருந்து
விடியும்வரை
படித்துப்பார்க்கிறேன்...!

கொட்டும் அருவியின்
அருகில் அமர்ந்து,
நீ சிரிப்பதாய் நினைத்து
நானும் சிரித்துக்கொள்கிறேன்...!

உயிருள்ளவரை - என்
உயிர்துடிப்பு நீ என
கவிதை எழுதியே
காலந்தள்ளுகிறேன்...!

வருடந்தோறும் வந்துபோகும்
காதலர் தினத்தில்,
நீ தந்துபோன பரிசுகளை
தினம் தினம்
விரல்களால் உரசிப்பார்க்கிறேன்...!

நம் காலடிப்பட்டு
கடற்கரை மணல் கருத்தரித்த
காலடிச்சுவடுகளை
தேடிப்போகிறேன்...!

இருவரும் இணைந்துநின்று,
இதழ்களால் புன்னைகைத்து,
புகைப்படமாய் என்
பழைய புத்தகத்திலிருக்கும்
நம்மை உற்றுநோக்குகிறேன்...!

என்னில் நீ
இதழ்பதித்த இடங்களின்
ஈரங்களை தேடிப்பார்க்கிறேன்...!

பெண்ணே...!
இனியென்ன நான் செய்ய...?
இன்னொருவனுக்கு நீ
மனைவியான பின்பு...

----அனீஷ் ஜெ...

21 Oct 2011

இரட்டை துண்டு இதயம் !

இரட்டை துண்டு இதயம் !


உன்னை நானும்,
என்னை நீயும் சுமக்கும்
ஒற்றை இதயத்துடன்
ஒரே பாதையில் பயணித்தது...!
நம் காதல்...

சிரிப்பதற்கு காரணங்களையும்,
அழுவதற்கு தோள்களையும்
பங்கிட்டுக்கொண்டோம் நாம்...!

எல்லையில்லா சந்தோஷங்களே
நமது எல்லையானது...!

எதோ ஒரு நொடியில்
நமக்குள் ஒரு பிளவு...!

வழிமாறியது பயணம்...!

இன்றோ உடைந்துபோன
இரண்டை துண்டு இதயத்துடன்,
ஒரே பாதையின்
இரு பக்கங்களிலுமாய் நாம்...!
ஆனால் பாதையோ
பிரிந்துகிடக்கிறது...!
என்றுமே ஒன்றுசேர முடியாத
தண்டவாளம் போல...

----அனீஷ் ஜெ...

14 Oct 2011

காதல் முத்தம் !

காதல் முத்தம் !


உதடுகள் பேசிக்கொள்ளும்
ஊமை மொழி இது...!

”இச்” என்ற
இதன் சத்தத்தில்,
“நச்” என்று
நசுங்கி சிரிக்கும் மனது...!

எச்சில்கள் கூட
தீர்த்தமாவது இதில் மட்டுமே...!

இதை பரிமாறினால்தான்
காதல் கூட வயதுக்குவரும்...!

இதன் ஈரம் பட்டால்
சகாரா இதயத்திலும்
சட்டென மழை பெய்யும்...!

எல்லை மீறல்களுக்கு
ஆரம்ப புள்ளியும்,
செல்ல சண்டைகளுக்கு
முற்றுப்புள்ளியும் இதுதான்...!

உதடுகள் போடும்
கோலம் இது...!
உயிர்வரை தொடும்
ஜாலம் இது...!

காதலின் முகவரியாய்,
காமத்தின் முதல் வரியாய்,
எததனையோ உதடுகளில்
சத்தமில்லாமல்
பேசிக்கொண்டிருக்கிறது...!
இந்த காதல் முத்தம்...

----அனீஷ் ஜெ...

11 Oct 2011

முழுநிலா வானம் !

முழுநிலா வானம் !


ஒரு மழைக்கால
பவுர்ணமி இரவு...!

என் பழைய டையரியில்
முதுமையாகிக் கொண்டிருக்கும்
என்றோ எழுதிய
என் கவிதைகளை
புரட்டிபார்த்தவாறே நான்...!

கவிதை காகிதம் முழுக்க
அவள் மட்டுமே
வார்த்தைகளாகியிருந்தாள்...!

அவளை நிலவெனச்சொல்லி,
அவளுக்காய் நான் எழுதிய
முதல் கவிதை...!
முதல் வரியை படித்தபோதே
மூச்சு முட்டியது எனக்கு...!

அவளை சுமக்கும் மனது
மரண வலியில் துடிப்பதாய் உணர்வு...!
கண்ணீர்துளி விழுந்து
காகித எழுத்துக்கள்
கரைந்துவிடும் போலிருந்தது...!

டயரியை மடித்துவைத்துவிட்டு
திண்ணைக்கு வந்தேன்...!

மழை சொட்டுசொட்டாய்
பூமியை தொட்டுக்கொண்டிருந்தது...!

வானத்தை பார்த்தேன்...!

நிலைவை சுமந்த வானமோ,
மின்னல் பட்டு
கொஞ்சம் கொஞ்சமாய்
உடைந்துகொண்டிருந்தது...!
அவள் என்னும்
நிலவை சுமக்கும்
என் மனசை போல...

----அனீஷ் ஜெ...

9 Oct 2011

முதல் நண்பன் !

முதல் நண்பன் !


நம் ஒன்றாம் வகுப்பில்,
உன் ஒற்றை பென்சிலை
இரண்டாக உடைத்து
ஒரு பாதியை
எனக்கு தந்தபோதுதான்
நாம் முதன் முதலில்
நட்பை பரிமாறினோம்...!

என் ஆறு வயதில்
என் வாழ்க்கையில் வந்த
முதல் நண்பன் நீயானாய்...!

நாம் இருவரும்
நண்பர்களானதாலென்னவோ,
நாம் எப்பொழுதும் கடைசிதான்...!
வகுப்பு பெஞ்சிலும்...
படிப்பிலும்...

பள்ளிக்கூட மதியவேளைகளில்
நட்போடு நாம் பகிர்ந்துகொண்ட
உணவின் ருசியை
எந்த உணவும் அதன்பிறகு
எனக்கு தந்ததில்லை...!

ஐந்தாவது வகுப்பில்,
இரண்டாவது பெஞ்சில் அமரும்
இனியாவை - நாம்
இருவரும் சேர்ந்து சைட் அடித்தது
இப்பொழுதும் ஞாபகம் இருக்கிறது எனக்கு...!
ஒருவேளை நாம்
பிஞ்சிலே பழுத்திருக்கலாம்...!!

கவலைகளே இல்லாமல்
சந்தோசங்களை சுமந்த நமக்கு,
புத்தகபைகள் கூட
சுமைகளாக தெரியவில்லை...!

பள்ளிக்கூடம்...!
விடுமுறை நாட்கள்...!
விளையாட்டு மைதானம்...!!
கோயில் திருவிழா...!
கோடை விடுமுறை...!!
இப்படி எல்லாவற்றையும் - நாம்
ஒன்றாகவே கழித்திருக்கிறோம்...!

ஆறாவது வகுப்பு பாதியில்,
உன் அப்பாவுக்கு
அலுவலக இடமாறுதல் என சொல்லி
வெளியூருக்கு புறப்பட்டாய் நீ...!
உன் பெற்றோருடன்...

நீ சென்ற பேருந்து
கடைசியில் ஒரு
புள்ளியாய் மறையும் வரை,
கண்கள் முழுக்க கண்ணீர்துளிகளுடன்
கைகாட்டி மறைந்த
உன் முகம் - இப்பொழுதும்
ஞாபகம் இருக்கிறது எனக்கு...!

ஆண்டுகள் பலவாகிவிட்டன...!
ஆனாலும் இப்பொழுது நீ
எங்கிருக்கிறாய் என
எனக்கு தெரியவில்லை...!!

எப்பொழுதாவது - உன்
முகத்தோற்றம் கொண்ட மனிதர்கள்,
என் எதிரில் வந்தால் - அவர்கள்
என்னைத்தாண்டி சென்றபின்பும்
ஒருமுறை திரும்பிபார்க்கிறேன் நான்...!

என்றாவது ஒருநாள்
என் கண்ணில் பட்டு,
நான் திரும்பிபார்க்கும் மனிதன்
நீயாக இருந்து,
நீயும் என்னை திரும்பிப்பார்க்கலாம்
என்ற நம்பிக்கையோடு...

----அனீஷ் ஜெ...

7 Oct 2011

திருடிய பொழுதுகள் !

திருடிய பொழுதுகள் !


ஒற்றையடி பாதையில்
உனக்காய் நான் காத்துநின்ற
ஓராயிரம் நிமிடங்கள்...!

உன்னிடம் நான்
காதல் தேடிய காலங்களில்
நான் தொலைத்த,
காதல் காலங்கள்...!

நீ கிடைப்பாய் என்பதற்காக
உன்னுடன் நான் செலவிட்ட
என் நாட்கள்...!

சின்ன சண்டைகளின் முடிவில்
உன் மவுனத்தை உடைப்பதற்கு
நான் போராடிய தருணங்கள்...!

உன் குரல் கேட்பதற்காகவே
தூக்கத்தை இழந்த
பல நூறு இரவுகள்...!

உன்னை நினைப்பதிலே
நான் தொலைத்துக்கொண்டிருக்கும்
என் ஆயுளின் நொடிகள்...!

என்னிடம் திருடிய
இதயத்தை நீ
கசக்கி பிழிந்து
திருப்பித் தந்துவிட்டாய்...!
எப்பொழுது நீ
திருப்பிதர போகிறாய்...?

நீ என்னிடம் திருடிய
என் பொழுதுகளை...

----அனீஷ் ஜெ...

6 Oct 2011

காதல் கடிதம் !

காதல் கடிதம் !


உன்னை கண்டதும் - என்
உதடுகளுக்குள்
உயிர்விடும் வார்த்தைகளை - நான்
கைகளால் கிறுக்க நினைத்து,
கடைசியில் மிஞ்சியது - இந்த
கடிதம் மட்டுமே...!

இப்பொழுதெல்லாம்
நீ என்
எதிரில் வரும்போதெல்லாம்,
ஏதேதோ ஆகிறது...!
என் இதயம்...

ஒவ்வொரு இரவும்
ஓராயிரம் வருடங்களாய்
நீள்வது போல்
ஒரு உணர்வு...!

என் கனவுகளின்
கடைசி நுனிவரை நுழைந்து,
தினவும் உன்னைத்தான்
தேடி அலைகிறேன் நான்...!

உனக்காகவே வாழலாம் என்றும்,
உனக்காகவே சாகலாம் என்று
உரக்க கத்துகிறது...!
என் மனது...

உனக்காய் காத்திருப்பது,
காற்றில் பறப்பதை விட
சுகமாய் இருக்கிறது...!

உன்னை காதலித்தே
காலந்தள்ளிக்கொண்டிருக்கிறேன் நான்...!

நீயும் என்னை
காதலிக்கிறாயென்றால்,
உன் இதயம் கொடு...!
இல்லையென்றால்
எனக்கொரு பதில் போடு...!!
இன்னொரு கடிதம்
எழுத வேண்டும் நான்...!
உன் இதயம் வேண்டி...

----அனீஷ் ஜெ...

5 Oct 2011

விடியல்கள் தொடரும்...

விடியல்கள் தொடரும்...


நிலா மறைந்தது...!
கூடவே அந்த முகமும்...

தூக்கம் தொலைந்து,
கனவும் கலைந்தது...!
அதனுடன் கலைந்து தொலைந்தது...!!
நெஞ்சுக்குள் மிச்சமிருந்த
சில நினைவுகள்...

பறவைகளின் சிறகசைவு,
சிட்டுக்குருவியின் சிணுங்கல் என
மவுனம் கலைத்தது வான்வெளி...!
அப்படியே என் இதயமும்...

புல்வெளிகளை நனைத்தது
அதிகாலை பனித்துளி...!
எனக்குள் நனைந்து கரைந்தது,
என்றோ முளைத்த காதல்...

தெளிவானது வானம்...!
கூடவே என் மனதும்...

இருட்டை தொலைத்த
இனிமையான விடியல்கள்
இனி தொடரும்...
பூமிக்கும்...
புதியவனாகிவிட்ட எனக்கும்...

----அனீஷ் ஜெ...

19 Sept 2011

கோயில் வாசலில்...

கோயில் வாசலில்...


பிறந்ததிலிருந்தே
தேடிப்பார்க்கிறேன்...!
கால்கள் இரண்டையும்
காணவில்லை...!!
கையும் ஒன்றுதான்...!
இன்னொன்றை தேடவில்லை...!

இறைவன் தந்ததோ
இருபது விரல்கள்...!
எனக்கு இருப்பதோ
ஐவிரல்கள்தான் ஆகமொத்தம்...!

இரு கரங்கள் இருந்தும் - எனக்கு
ஆதரவு கரம் தர யாருமில்லை...!
இரக்கமில்லாத இதயங்கள்...!!

உழைக்கவும்,உணவுக்கும்
எனக்கு வழியில்லை...!

குப்பைதொட்டியே
எனக்கு உணவூட்டியது...!
கூரையில்லா குப்பைமேடு
எனக்கு கூடாரமானது...!!

பசியை தவிர,
அதிகமாய் எதையும்
ரசித்ததில்லை நான்...!

அன்றொருநாள்...
என் பார்வையில் பட்டது...!
அந்த வழியருகில் இருந்த
கோயில் வாசல்...

என்னைப்போலவே அங்கு
ஏராளமானோர்...!

சிலருக்கு விழியில் ஒளியில்லை...!
பலருக்கு உடலில் சில உறுப்பில்லை...!!

வருவோர் போவோரெல்லாம்
விட்டெறிந்து போயினர்...!
மதிப்பில்லாமல் மரித்துபோன,
பழைய சில்லறைகளை...!

அவமானமாக தெரியவில்லை...!
அவர்களோடு நானும் உட்கார்ந்தேன்...!

என் முன்னிலும் இப்பொழுது
சிந்ததொடங்கியது...!
சில்லறைகள்...

கூச்சல் போட்டு,
கூவி அழைத்தாலும்
குறைந்த சில்லறைகளே கிடைத்தது...!

கூட்ட நெரிசலான
கோயில் வாசலிலும்,
யாரும் கண்டுகொள்ளவில்லை...!
எங்களை...

பக்தியோடும்,
பணக்கட்டுகளோடும்
காத்திருந்தனர்...!
கடவுளை தரிசிக்க...

எடைக்கு எடை தங்கத்தால்
கடவுளுக்கு கொடை கொடுக்க,
காணிக்கை பெட்டிக்கோ
மூச்சு முட்டியது...!

பாவம் தீர்க்கும் கடவுள்
இப்போது
பணக்காரனாய்
காட்சி தந்தான்...!

காணிக்கையால்
கல்லாய் வீற்றிருந்த
கடவுளை குளிப்பாட்டி,
ஆசி கிடைத்த திருப்தியோடு
திரும்பிக்கொண்டிருந்தது...!
பக்தர் கூட்டம்...

இப்போதும் வழக்கம்போல்
கைநீட்டினேன்...!
முகம் சுழித்துக்கொண்டே
பைக்குள் கைவிட்டு
விட்டெறிந்தனர்...!
வழக்கம்போல் சில்லறையை...

உண்டியலுக்கு
உணவுகொடுக்கும் இவர்கள்,
எங்களுக்கு ஒருவேளை
உணவு கொடுத்தாலென்ன...!

யோசித்தவாறே திரும்பிபார்த்த நான்
அவனை கண்டதும் அதிர்ச்சியடைந்தேன்...!

என்னருகில் உட்கார்ந்து,
முன்னிலொரு துணிவிரித்து,
ஒரு முடவனாய்
கைநீட்டி காசு கேட்டுக்கொண்டிருந்தான்...!
கடவுள்...

----அனீஷ் ஜெ...

13 Sept 2011

அவள் அங்கிருந்து பேசுகிறாள் !

அவள் அங்கிருந்து பேசுகிறாள் !


கூட்டம் அதிகம் இல்லாத
அந்த பேருந்து நிலையம்...!

மனிதர்களை சுமந்து,
மரத்துப்போன
சிமெண்ட் நாற்காலிகள்
ஆங்காங்கே
ஓய்வெடுத்துக்கொண்டிருந்தன...!

என்னை சுமந்துகொண்டிருந்த
ஒரு நாற்காலியின் மேல்
நான் காத்திருந்தேன்...!
என் பேருந்திற்காய்...

கைக்கடிகாரத்தில்
மணியும்,
காணும் இடமெல்லாம்
மனிதர்களும்,
வேகமாய் பயணித்துக்கொண்டிருந்தனர்...!

என் எதிரே - ஒரு
ஒற்றை நாற்காலியில்
ஒரு தாயும் குழந்தையும்...!

கையில் ஒரு கறுப்பு பை...!
முகமெல்லாம்
கவலையின் ரேகைகள்...!
சோகத்தின் துளிகளை
மனதில் எங்கோ
மறைத்து வைத்திருப்பதன்
அடையாளங்கள்
அந்த தாயின் முகத்தில்...

கவலையே இல்லாத முகம்...!
குறும்பு செயல்கள்...!
இரண்டு பற்களுக்கிடையில்,
இரண்டு பற்கள் இல்லாததன்
இடைவெளி...!
அந்த பெண் குழந்தைக்கு,
ஐந்து வயதிருக்கும்...

அம்மாவை சுற்றியே
அவள் ஓடியாடிக்கொண்டிருந்தாள்...!
அவள் குறும்புகளை
ரசித்தபடியே நான்...!!

அவளை பார்த்துக்கொண்டிருந்த
என்னைப்பார்த்து - அவளோ
அடிக்கடி சிரிக்கவும் செய்தாள்...!

அம்மாவை இழுப்பதும்,
ஆகாயத்தை பார்த்து சிரிப்பதும்,
அடிக்கடி குதிப்பதும்,
அம்மா முறைத்ததும்
அமைதியானதுபோல் நடிப்பதும்,
அத்தனையும் என்னை
அவளை ரசிக்க வைத்தது...!

பையிலிருந்து எதையோ எடுத்து
தூரத்திலிருந்த என்னிடம் நீட்டினாள்...!
தூரத்திலிருந்தே நான் கைநீட்ட,
சிரிப்புடன் கையை
பின்னால் இழுத்துக்கொண்டாள்...!!

அங்கிருந்து அவள்
என்னிடம் ஏதோ பேசுவது போலிருந்தது...!

பேருந்து வருவதற்கு முன்
ஒருமுறை அவளது
குறும்பு பேச்சை கேட்டே ஆக வேண்டும்...!
தெரியாத என் குரல் கேட்டு,
புரியாமல் பயப்படுவாளா
யோசித்துக்கொண்டே அவளருகில் சென்றேன்...!!

நான் அருகில் சென்றதும்
அமைதியான அவளிடம்,
உன் பெயரென்ன என கேட்டேன்...!
கைகளை பிசைந்துகொண்டே
அவள் அம்மா முகத்தையும்
என் முகத்தையும் மாற்றி மாற்றி பார்த்தாள்...!!

பதில் இல்லை...!

இன்னொருமுறை கேட்பதற்கு முன்
அவள் அம்மா என்னிடம் ஏதோ சொன்னாள்...!

என் பேருந்து வந்து விடவே
நான் டாடா சொல்லிவிட்டு பயணமானேன்...!
ஆனாலும் எனக்கும்
இன்னும் நம்ப முடியவில்லை...!!
அந்த குட்டி பெண்ணுக்கு
காதும் கேட்காது,
பேசவும் வராது என்று
அவள் அம்மா சொன்னதை...

----அனீஷ் ஜெ...

7 Sept 2011

நீ என்பவள் என் உயிராக...

நீ என்பவள் என் உயிராக...


என்
எண்ண கனவுகளில்
வண்ணங்களை
வாரி இறைத்தவள் நீ...!

என்
மூச்சுப்பையின்
மூலையில் எங்கோ - என்
முதலும் முடிவுமாய்
நிறைந்துகிடப்பவளும் நீதான்...!

உன் மவுனத்தின் குரலையும்,
உன் மனதின் காதலையும்,
கலந்தெடுத்துதான்
கவிதை நெய்கிறேன் நான்...!

உன்னை நிலவென்று
நான் பொய் சொல்வதும்,
நீ என் உயிரென்று
நான் உன்னை கொஞ்சி கொல்வதும்,
நீ ரசித்த நிகழ்வுகளாய்
உன் ரகசிய நினைவுகளில்...

முத்தம் கேட்டால் - நீ
முதலில் மறுப்பதும்,
இன்னொன்று கேட்டால்
இரு கண்களால் முறைப்பதும்,
ஆயிரம் முத்தங்களின்
ஆரம்பமாகிவிடுகின்றன...!

உன் குரல் கேட்கும் தருணங்களும்,
உன் விரல் பிடித்த பயணங்களும்
இன்னும் நீளச் சொல்லி
என்னை கேட்கிறது என் மனது...!

ஆயிரம் ஜென்மங்கள் - நான்
அவதரித்து வந்தாலும்,
நீதான் வேண்டுமென
நியாயம் பேசுகிறது என் இதயம்...!

உன்னை இழந்தால் - நான்
பிழைப்பதற்கு வழியேயில்லை...!
ஏனென்றால்,
என் இதயத்தோடு துடித்து
என்னுள்ளே பரவிக்கிடக்கும்
என் ஒற்றை உயிர் நீ...

----அனீஷ் ஜெ...

2 Sept 2011

அவளின் இரயில் பயணத்தில்...

அவளின் இரயில் பயணத்தில்...


அப்பொழுதுதான்
இரவு மணி
இரண்டை தாண்டியிருக்கும்...!

என் கனவுலகம்
வெற்றிடங்களால்
வெறிச்சோடி கிடக்க,
ஆழ்ந்த தூக்கத்தில் நான்...!

என் செல்போனோ
மெல்ல சிணுங்கும் சத்தம்...!

சத்தம் வந்த
இடத்தை நோக்கி
என் கைகள் தேட,
கண்கள் மூடிய தூக்கத்தில்
இன்னும் நான்...

செல்போனை
காதோடு அணைத்தபடி,
உளறல்களின்
ஊமை பாஷையில்
ஹலோ சொன்னேன் நான்...!

அங்கிருந்தும் அதே ஹலோ...!
அது அவளின் குரல்...!!
அவளென்று தெரிந்த
அடுத்த நொடியே
தூக்கம் கலைந்தது எனக்கு...!

காற்றின்
கதறல் சத்தத்துடன்,
தண்டவாள இரயிலின்
தடதட சத்தம்
பெரிதாய் கேட்டது...!

இரண்டு நாட்களுக்கு முன் - அவள்
இரயில் பயணம் பற்றி சொன்னது
இப்போது எனக்கு ஞாபகம் வந்தது...!

இரயிலின்
இரைச்சல்களுக்கிடையில்
அவளின் குரல்
மெலிதாய் கேட்டது...!

இரயில் நிலையம் முதல்,
இரவு நேர இரயில் பயணம் வரை
எதையும் விடவில்லை அவள்...!
எல்லாவற்றை பற்றியும் பேசினாள்...!!

சற்றும் எதிர்பார்க்கவில்லை நான்...!
செல்போன் வழியே
சட்டென்று ஒரு முத்தம் தந்தாள்...!

என்னாச்சு என்ற எனக்கு - ஒரு
சின்ன சிரிப்பு சத்தம் மட்டுமே
பதிலாய் கிடைத்தது...!

நல்லா தூங்கு என சொல்லி
போன் வைத்தாள் அவள்...!

சத்தம் மொத்தமாய்
நிசப்தமானது இப்போது...!
என் இதயம் மட்டும்
இடி போல் சத்தம் துடித்தது...!!

மொட்டுகளாய் - என்
குட்டி நெஞ்சில் - நான்
நட்டு வைத்திருந்த காதல்,
பூவாய் முட்டி விரிய தொடங்கியது...!

அன்றிரவு - என்
நினைவுகள் முழுவதும்,
அவளையும்,
அவள் பயணித்துக்கொண்டிருக்கும்
இரயிலையும் சுற்றி வந்தது...!

எனக்கும் அவளுடன் சேர்ந்து
பயணிக்க வேண்டும் போலிருந்தது...!
நான் மரணிக்கும் வரை,
அவளின் கைகளை கோர்த்தபடியே
ஒரு காதல் பயணம்...

----அனீஷ் ஜெ...

29 Aug 2011

சொர்க்கம் கண்முன்னே...

சொர்க்கம் கண்முன்னே...


வானத்தின் வாசற்கதவுகள்
என்னை வரவேற்க
திறந்திருந்தன...!

கடவுள்
கண்ணயராமல்
கடமை செய்துகொண்டிருந்தான்...!

கோடி மின்னல்
கூடியதுபோல் ஒளி...!

ஆக்ஸிஜனோ
அத்தராய் கமகமத்தது...!

எமனை தேடிப்பார்த்தேன்...!
எங்கேயும் காணவில்லை...!!
எங்கேயோ கேட்ட கதை பொய்யானது...!!!

தண்ணீரில் முகம் பார்த்தேன்...!
தங்கத்தில் கால் பதித்தேன்...!!

வான தேவதைகளோ
அழகிகளாய்
அணிவகுத்து நின்றனர்...!!

பூமி எங்கோ நின்று
சுழன்று கொண்டிருந்தது...!

சொர்க்கத்தின் அழகு
உண்மையிலே என்னை
சொக்க வைத்தது...!

வானத்தை விட்டு
வீடு திரும்ப
விருப்பமில்லை...!

திடீரென
ஏதோ ஒரு சத்தம்...!
சொர்க்கத்தின் கோயில் மணியா?

யோசித்துக் கொண்டிருக்கும்போதே
ஐந்துமணி அலாரம்
அலறியடித்துக்கொண்டிருந்தது...!

நான் அலறியடித்து எழுந்தேன்...!
தூக்கத்தைவிட்டு...

----அனீஷ் ஜெ...

24 Aug 2011

ஆச்சரியமானவன் நீ...

ஆச்சரியமானவன் நீ...


அன்று நான் பிறந்து
கண் திறந்தது முதல்,
இன்று வரை
என்னை உன் நெஞ்சுக்குள்
புதைத்து வைத்திருப்பவன் நீ...!

உன் கைவிரல் பிடித்துதான்
நான் நடக்க கற்றுக்கொண்டேன்...!
இன்று வரை
அப்படியே தொடர்கிறது...!
அந்த பயணம்...

எல்லாம் தெரிந்த
அற்புத மனிதனாய்,
என் கண்களுக்கு தெரிந்த
முதல் மனிதன் நீ...

என் மீது நீ வைத்திருக்கும்
அன்புக்கும் அக்கறைக்கும்
அடையாளமாகிவிடுகின்றன...!
உன் கண்டிப்புகளும்
சில தண்டிப்புகளும்...

உன் வார்த்தைகளை விட
உன் மவுனத்திற்கே
நான் அதிகம் பயப்படுகிறேன்...!

இருட்டிலே நடந்தால்
ஒளிகாட்டவும்,
இதுதான் சரியென்று
வழிகாட்டவும்,
உனக்கு நிகராய்
இங்கு எவருமில்லை...!

நீ எனக்கு
கற்றுகொடுத்தவைகளும்,
நீ எனக்காய்
விட்டுக்கொடுத்தவைகளும் ஏராளம்...!

அம்மா என்பவள்
பத்துமாதம் கருவில் சுமக்க,
மிச்ச காலம் முழுவதும்
இதயத்திலும்
தோள்களிலுமாய் சுமக்கும்,
அப்பா என்னும்
ஆச்சரியமானவன் நீ...

----அனீஷ் ஜெ...

20 Aug 2011

சின்ன கவிதைகள் - வருங்கால காதலி

சின்ன கவிதைகள் - வருங்கால காதலி

 

சிரிக்கிறாள்...!
ரசிக்கிறேன்...!!
முறைக்கிறாள்...!
எதிர்க்கிறேன்...!!
நான் வலைவிரித்து காத்திருக்கும்,
என் வருங்கால காதலி...


***********************************************************************************



ஒளியிலே தேடினேன்...!
ஒளிந்து கொண்டது...!!
இருட்டிலே தேடினேன்...!
இங்கே கிடக்கிறது...!!
நிலா...

***********************************************************************************



வயதாகிவிட்டதா
வானவில்...!
முதுகுக்குப்பின்னால்
முழுதாய் ஒரு கூனல்...

----அனீஷ் ஜெ...



16 Aug 2011

புரியாத புதிர் இது !

புரியாத புதிர் இது !


உயிருக்கும்
உணர்வுகளுக்கும் இடையேயான
உலகப்போர் இது...!

இரவில் சூரியன் சுடுவதும்,
பகலில் நிலா தெரிவதும்
இதில் மட்டுமே சாத்தியம்...!

பூமியில்
சொர்க்கம் தந்து செல்லவும்,
வாழ்க்கையை
நரகமாக்கி கொல்லவும்
இதற்கு மட்டுமே தெரியும்...!

உறக்கத்தை தொலைத்துவிட்டு
கனவுக்குள் தொலைவதும்,
இதயத்தை தொலைத்துவிட்டு
நினைவுகளோடு அலைவதும்,
சுகமான உணர்வாவது
இதில் மட்டுமே...

உளறல்களில் கூட
இசை சொட்டும் - இதில்
கிறுக்கல்கள் கூட
கவிதையாகி கத்தும்...!

மவுனங்களும் இங்கே
பேசிக்கொள்ளும்...!
வார்த்தைகள் சிலநேரம்
மவுனமாகி கொல்லும்...!!

சண்டைகள் கூட
முத்தத்தில் முடியும்...!
மோதிக்கொள்ளாமலே
இதயங்களும் உடையும்...!!

நெஞ்சோடு கொஞ்சம்
சிறகுகள் முளைக்கும்...!
பார்வைகளில் இதயம்
செத்து செத்து பிழைக்கும்...!!

தன்னந்தனியே சிரிக்கவும்,
தனிமையில் அழவும்,
இது மட்டுமே
கற்றுக்கொடுக்கும்...!

வானுக்கு கீழே,
பூமிக்கு மேலே - இந்த
பூகோள வெற்றிடத்தில்,
இதைபோன்ற
துன்பமுமில்லை..!
இதைப்போன்றதொரு
இன்பமுமில்லை...!

இந்த புரியாத புதிர்தான்,
காதல்...

----அனீஷ் ஜெ...

12 Aug 2011

மழைத்தூறல்கள் !

மழைத்தூறல்கள் !


சின்னதாய் மழைத்தூறல்...!
சிந்தி விழும் மழைத்துளியோ
சிரிப்பதுபோல் இருந்தது...!!
சிறு இரைச்சல்களுக்கிடையில்
சிட்டுக்குருவியின் குரல்...!!!

வடக்கு வானத்தில்
வானவில் மெதுவாய்
வளர்ந்திருந்தது...!

காற்று மோதியதாய்
கதை பேசியது மரங்கள்...!

குடையில்லை எனக்கு...!
சட்டைக்கு மேலே
பொட்டு வைத்தது மழைத்துளி...!!

தூறல் மழை இப்பொழுது
வானத்திலிருந்து வந்திறங்கிய
ஆறாய் உருமாறியது...!

மழையில் நனைந்தேன் நான்...!

ஏதோ நினைவுகள்
என் அடிநெஞ்சை நனைத்தது...!

இதயத்தின் ஓசை
இப்பொழுது
இடியையும் மிஞ்சியது...!

ரசிக்க தெரிந்த கண்கள்
ரகசியமாய் அழுதன...!
மழை துளிகளுக்கிடயில் மோதி,
மரித்துப்போனது கண்ணீர்துளிகள்...!!

முதுகுக்குப்பின்னால்
மெதுவாய் ஒரு
காலடி சத்தம்...!

கண்களை திருப்பினேன் நான்...!

யாரும் என்னை
பின்தொடரவில்லை...!
ஒற்றைகுடையில் - என்னோடு
ஒன்றாய் நடந்த,
அவளின்
நினைவுகளை தவிர...

----அனீஷ் ஜெ...

6 Aug 2011

குட்டி கவிதைகள் - நிலா நீ...

குட்டி கவிதைகள் - நிலா நீ...


தொலைதூர நிலவையும்,
தொடுவான அழகையும் - என்
தோள்கள் சுமக்கிறது...!
என் தோள்களில்
சாய்ந்திருக்கிறாள் அவள்...

***********************************************************************************


தொலைத்த பின்பும்,
தேட மனமில்லை...!
உன்னிடம் தொலைத்த
என் இதயத்தை...

***********************************************************************************


நிலவாய் நீ...!
உன் நினைவுகளால்
தினம் தினம்
தேய்வதோ நான்...

----அனீஷ் ஜெ...

2 Aug 2011

கருவறையிலிருந்து ஒரு கடிதம்...

கருவறையிலிருந்து ஒரு கடிதம்...

 

சுற்றும் முற்றும் பார்க்க,
இங்கே
சுதந்திரமில்லை...!

முதுகை திருப்பவோ,
முகம் நிமிரவோ
முடியவில்லை எனக்கு...!

நிசப்தமான - இந்த
நிகழ்காலத்தில்
நிழல் கூட
எனக்கு சொந்தமில்லை...!

என் உறுப்புகளெல்லாம்
சுறுசுறுப்பாய்
இயங்கதொடங்கிவிட்டது இப்போது...!

இன்னும் சிலகாலம்தான்,
இந்த இருட்டறையிலிருந்து
இடம் மாறிவிடுவேன் நான்...!

நினைத்தபோதே - என்னை
நனைத்து சென்றது
மகிழ்ச்சியின் அலை...!

மகிழ்ச்சியில் ஒருமுறை
உரக்க சிரித்தேன்...!
ஐயோ...!!
நான் சிரித்தது,
எனக்கே கேட்கவில்லை...!!

பல்லில்லாத வாயிலிருந்து,
சொல்லொன்றும் வரவில்லை...!

இமைகளை ஒருமுறை
இருக்கி அடைத்தேன்...!
இருட்டறையில் இதிலொன்றும்
வித்தியாசம் தெரியவில்லை எனக்கு...!!

கரங்களை மெதுவாய்
தட்டிக்கொண்டேன்...!
நான் எட்டி உதைப்பதாய்
வெளியே யாரோ பேசிக்கொண்டனர்...!!

கண்கள் முழுக்க கனவையும்,
இதயம் முழுக்க அன்பையும்
சுமந்துகொண்டு - நான்
காத்திருக்கிறேன்...!
என்னை சுமக்கும்
என் தாயின் முகம் காண...

----அனீஷ் ஜெ...


29 Jul 2011

ஹைக்கூ கவிதைகள் - காதல்

ஹைக்கூ கவிதைகள் - காதல்

 

மனசு இரண்டும் கூடல் செய்ய,
உயிருக்குள் புதிய உயிர் தரிக்க,
நம் இதயம் இரண்டிலுமாய்,
ஒட்டிப்பிறந்த
ஒற்றை குழந்தை...!
காதல்...


*****


உன் உதடுகளின்
மவுனப்பூட்டை - என்
உதட்டு சாவியால் திறக்க,
நான் செய்ய்யும் யுத்தம்...!
முத்தம்...

*****


உன் பார்வை
என்மேல் பட்டதும் - என்
இதயத்தின் ஓரம் பாய்ந்தது...!
இந்த மின்சாரம்...!!
காதல்...

----அனீஷ் ஜெ...