19 Jan 2016

அவள் வீட்டு பூக்கள் !

அவள் வீட்டு பூக்கள் !


பறிக்கப்பட்டபின்தான்
பூக்களெல்லாம் வாடும்...!
அவள் வீட்டுச்செடியில் மட்டும்
பறிக்கப்படாதா பூக்கள் வாடுகிறது...!
செடியில் வாழ்வதைவிட,
அவள் கூந்தலில் சாவதே
அவைகளுக்கு பிடித்திருக்கலாம்...!

----அனீஷ் ஜெ...


13 Jan 2016

தென்றல் வீசியது !

தென்றல் வீசியது !


தென்றலாய் வீசிச்சென்றாய்,
நீ உன் பார்வையை...!
உனை சுற்றியே பறக்கிறேன் நான்...!
சிறு சருகாய்...


*********************************************************************************


தென்றலென்றேன் நான் உன்னை...!
அதற்காக ஏன் வீசிச்செல்கிறாய்...?
வீதியில் என் இதயத்தை...


----அனீஷ் ஜெ...

Written By : Anish J.
Requested By : Sikkandar Babu.


11 Jan 2016

பாதை !

பாதை !


என் கைகளை பிடித்தே
நடந்துகொண்டிருந்தாய் நீ...!

உன் பாதைகள்தான்
எனக்கும் பாதைகளானது...!
உன் பயணங்கள்தான்
என்னுடைய பயணமும்...

இன்று...
என் கைகளை
எனக்கே தெரியாமல்
உதறிவிட்டு
உனக்கான பாதைகளில்
பயணிக்கிறாய் நீ...!

நீ விட்டுச்சென்ற
அதே இடத்தில்
அழுதுகொண்டே நிற்கிறேன் நான்...!

நீயோ தனியாக
தவறான பாதையில்
தவறி சென்றுகொண்டிருக்கிறாய்...!

தவறான அந்த பாதையில்,
நீ எவ்வளவு பயணித்திருந்தாலும்
பரவாயில்லை எனக்கு...!
திரும்பி மட்டும் வந்துவிடு...!

ஏனென்றால்...
எனக்கான பாதையும்,
பயணமும் நீயே...

----அனீஷ் ஜெ...

Written By : Anish J.
Requested By : Santhiya.


9 Jan 2016

காதலித்துவிடாதே...

காதலித்துவிடாதே...


ஆயிரம் சிலுவைகளில்
ஆணிகளால் அறையப்படும்
வலி அறிந்ததுண்டா...?

நரம்புகளில் கூட
கண்ணீர் துளிகள் வழிந்து
கண்டதுண்டா...?

மாலைக்கும்,
காலைக்குமிடையேயான தூரத்தில்
கோடி முறை மரித்ததுண்டா...?

பேச்சும் மூச்சும்
தொண்டையில் சிக்கியே
தொல்லை தந்ததுண்டா...?

உச்சி வெயிலில்
இருள் தெரிந்ததுண்டா...?
இசையில்
இரைச்சல் கேட்டதுண்டா...?

பெரும் சாலையிலோ,
சிறு தெருவிலோ நின்று
கதறி அழ நினைத்ததுண்டா...?

பிடித்த உணவில் கூட
கொடிய நஞ்சின்
சுவை உணர்ந்ததுண்டா...?

வானம் உடைந்து
பூமியே பிளந்து
உலகமே அழிந்து போக
வேண்டியதுண்டா..?

மரணத்திற்காய் கடவுளிடம்
மன்றாடியதுண்டா...?

கோடி மரணங்களைவிட
கொடியது இந்த காதல்...!
ஆதலால்
காதலித்துவிடாதே...

----அனீஷ் ஜெ...



7 Jan 2016

மறுப்பதும்... மறப்பதும்...

மறுப்பதும்... மறப்பதும்...


மவுனம்
மனம் உடைத்தாள் அவள்...!

ஒரு யுக காதலை
ஒரு சிறு வார்த்தையால்
தகர்த்தாள்...!

தீரா காதலென்றவள் இன்று
நேர விரயமென்று -  என்
ஈர விழி செய்கிறாள்...!

பாதி கிறுக்கி,
மீதி நொறுக்கி இதயத்தை
வீதியில் வீசி எறிகிறாள்...!

தந்தைக்காய்
எந்தன் காதலின்
நெஞ்சில் உதைத்தாள்...!

காதலென்று என்னை
காயப்படுத்தி மறப்பதற்கு - அன்றே
காதலென்று நான் வந்தபோது
கண்டுகொள்ளாமல்
மறுத்திருக்கலாம்...!

காரணம்...
மறுக்கப்படும் வலியை விட
மறக்கப்படும் வலியே பெரியது...!

----அனீஷ் ஜெ

Written By : Anish J.
Requested By : Pavithran.


4 Jan 2016

என் பெயர்...

என் பெயர்...


பால்நிலா ஒளியில்
பாதியே தெரிந்தது
பரிதாபமான அந்த முகம்...!

அருகில் அழைத்தேன்...!

எனக்காகவே காத்துநின்றவன்போல
அருகில் வந்தான் அவன்...!

வந்தவன் வரலாறை உளறினான்...!
வந்தவிதம் பிதற்றினான்...!!

கூடுதல் காரணம் கேட்காமல்
கூடவே கூட்டிச்சென்றான் நான்...!

நிழலைபோல பின்தொடர்ந்தான் அவன்...!

கவலைகளையும்,
உணவுகளையும் பகிர்ந்துகொண்டோம்...!

நல்லவன் என்ற அடையாளத்துடன் - என்
நம்பிக்கையானவனுமானான் அவன்...!

ஒருநாள்...
மழைவிட்ட மாலைநேரம் அது...
என் பின்னே வந்துகொண்டிருந்நான் அவன்...!

எதிர்பார்க்கவேயில்லை...!
எட்டியென் முகத்தில் பிடித்தான்...!
கத்திய என் மூச்சை தடுத்து,
கத்தியொன்றால் என் கழுத்தை அறுத்தான்...!

பாதி உயிருடன்
வீதியில் விழுந்தேன் நான்...!

கட்டுப்படாத நாக்கை அசைத்து
காரணம் கேட்டேன் அவனிடம்...!
சிரித்தான்...!!

"உன் பெயரென்ன..?"
இது என் இரண்டாவது கேள்வி...!

முகத்தில் அணிந்திருந்த
நல்லவன் என்ற முகமூடியை
கொஞ்சம் விலக்கிக்கொண்டு,
பதில் சொன்னான் அவன்...!
“என் பெயர் துரோகம்...”

----அனீஷ் ஜெ...

31 Dec 2015

தேவதையின் முகமூடி !

தேவதையின் முகமூடி !


வாய்கிழிய சொன்ன - உன்
வார்த்தை சத்தியங்கள்
கிழிந்து தொங்குகிறது...!

என் எச்சில்பட்ட
உன் உதடுகளை,
இன்னொருவனுக்காய்
இறுக்கிப்பிடிக்கிறாய்...!

மரணத்தால் மட்டுமே நம்மை
பிரிக்கமுடியுமென நீ சொன்னது
மரணித்தே போய்விட்டது...!

பிரிவுகளை மட்டுமல்ல,
உன் வார்த்தைகளால்
வலிகளையும் சேர்த்தே தந்தாய்...!

நீ தந்த காயங்களை விட
என் கோபங்கள்தான் பெரிதாகிறது...!

எல்லைகளே இல்லாமல்
உன்னை வெறுக்கிறேன் நான்...!
ஏனென்றால்
தேவதையின் முகமூடியணிந்த
சாத்தான் நீ...

----அனீஷ் ஜெ...



28 Dec 2015

அரக்கி !

அரக்கி !


இரவு பகலாய்
இதயம் கொன்றாய்...!
அரக்கி போலவே
அதையும் தின்றாய்...!!

பாதி உயிரின்
மீதியை கேட்டேன்...!
விதி இதுவென்று
மிதித்தே சென்றாய்...!!

பாதை நடுவில்

பள்ளங்கள் தைத்தாய்...!
போதையானவன் போல
தள்ளாட வைத்தாய்...!!

நெஞ்சின் நடுவில்
ஊசி துளைத்தாய்...!
கெஞ்சிய என்னை
வீசியெறிந்தாய்...!!

சிரித்தால் அதையும்
அழுத்தி பறித்தாய்...!
மரிக்க சொல்லி
கழுத்தை நெரித்தாய்...!!

தவறி விழுந்தேன்
கைதட்டி சென்றாய்...!
கதறி அழுதேன்
கைகட்டி நின்றாய்...!!

வரங்கள் எதுவும் - நீ
தர வேண்டாம்...!
தரும் வலிகள் எதையும்
பின்வலிக்கவும் வேண்டாம்...!!

உயிருடன் என்னை கொஞ்சம்
உலகத்தில் வாழவிடு...!
வாழ்க்கை எனும் அரக்கியே...

----அனீஷ் ஜெ...


17 Dec 2015

புன்னகை மரணம் !

புன்னகை மரணம் !


புன்னகைத்துக்கொண்டே
மரணங்கள் நிகழ்வது
உங்களில் யாரேனும் கண்டதுண்டா...?

இதோ... இந்த நொடி...
உதடு நிறைய புன்னகையை ஏந்திக்கொண்டு,
இதயம் வெடிப்பதுபோல துடிக்க,
இறந்துகொண்டிருக்கிறேன் நான்...!
அவளின் ஓரப்பார்வைகளில்...

----அனீஷ் ஜெ...



14 Dec 2015

பயமறியாதவள் !

பயமறியாதவள் !


அது ஒரு
அமாவாசை இரவு...!

ஒளி தின்னும்
இருள் மிருகம்
நடமாடிக்கொண்டிருக்கிறது...!

காற்றே இல்லை...!
ஆனாலும்
தெருமுனையில்
ஒரேயொரு மரம் மட்டும்
பெரும் சத்தத்தோடு
அசைந்துகொண்டிருக்கிறது...!

மின்னல்களே இல்லா
இடிச்சத்தங்கள்
இரு காதுகளையும் பிளக்கிறது...!

நாய்களெல்லாம்
நரிகளைப்போல
ஊளையிடுகிறது...!

இரும்பு சங்கிலிகளை யாரோ
இழுத்துக்கொண்டு நடப்பதுபோல்,
இடையிடையே
இன்னுமொரு சத்தம்...!

ஆந்தைகள் இரண்டு
அலறிக்கொண்டிருக்க,
வவ்வால் கூட்டமொன்று
சிறகு விரித்து பறக்கிறது...!

சருகுகளில் சலனம்...!

வெள்ளை ஆடைகட்டி
வெளிச்சமில்லா விளக்கொன்றுடன்
தூரத்தில் யாரோ...

கரும்பூனையொன்று
வீட்டு சுவரை
நகங்களால் கிழிக்கிறது...!

இரவு கொடூரமாய் நீள்கிறது...!

ஆனால்
அவள் மட்டும்
பயமில்லாமல்
நடமாடிக்கொண்டிருக்கிறாள்...!
உறங்கிக்கிடக்கும்
என் கனவுகளில்...

----அனீஷ் ஜெ...